'ஒன் இந்தியா தமிழில்' வெளியான எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதைக் கருதான் மாஸ்டர் கதையா? வெடித்த சர்ச்சை
சென்னை: 'ஒன்இந்தியா தமிழில்' வெளியான, எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதையின் கருதான் மாஸ்டர் படத்தின் கதையா என்ற கேள்விகள் ரசிகர்களால் முன்வைக்கப்படுகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகியுள்ளது 'மாஸ்டர்' திரைப்படம். இந்த திரைப்படத்தின் மையக் கரு என்பது, சிறார் காப்பகங்களில் உள்ள சிறுவர்களை வைத்து கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவது. இதே மையக் கருதான், ஒன்+ஒன் =ஜீரோ கதையிலும் இடம் பெற்றிருந்தது. பிரபல கிரைம் திரில்லர் நாவல் எழுத்தாளர் ராஜேஷ் குமார், நமது 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டில் இந்த கதையை தொடர்ந்து எழுதி வந்திருந்தார்.
ராஜேஷ்குமாரின் நாவல்களை தழுவி அல்லது மையக் கருவை வைத்து அவரது அனுமதியை கூட பெறாமல் படங்கள் வருவது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. தமிழ் இயக்குநர்களின் சிந்தனை திறன் குறைந்து விட்டதா, கற்பனை வளம் மங்கிவிட்டதா என்ற கேள்விகளை எழுப்புகிறது இதுபோன்ற சம்பவங்கள்.
ராஜேஷ் குமார் கதைக் கருவை வைத்து 2 வருடங்கள் முன்பு வெளியான மற்றொரு படம், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்த "திருமிரு பிடிச்சவன்" இந்த திரைப்படத்தை இயக்கியது கணேசா.
ஒரு படைப்பாளியின் படைப்பை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது சட்டப்படியும், தார்மீகப்படியும் தவறானது என்று எழுத்துலகில் உள்ள பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ராஜேஷ்குமாரின் "ஒன் + ஒன் = ஜீரோ" - திரில்லர் தொடர்
தமிழ் சினிமா பிரபலங்கள் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'சர்கார்' திரைப்படத்தின் கதைக் கரு, வருண் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமானது என்றும், செங்கோல் என்ற பெயரில் அவர் பதிவு செய்து வைத்த கதைக் கருதான் சர்கார் திரைப்படத்தின் கதைக் கரு என்றும் சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றது. இறுதியில், கதைக் கரு, ஒரே மாதிரி இருப்பதை முருகதாஸ் ஒப்புக்கொண்டு, சர்கார் திரைப்படத்தின் ஆரம்பத்தில், வருண் ராஜேந்திரனின் பெயரை திரைப்படத்தில் இடம்பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.