ஜெ.மரணத்திலும் மர்மங்கள்... ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை- மேத்யூவின் அடுத்த குண்டு!
சென்னை: ஜெயலலிதா மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவை களையப்பட வேண்டும் என்று தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்பட வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் மேத்யூ சாமுவேல் சென்னை வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் மம்தா கூறுகிறார் என் பின்னால் பாஜக இருப்பதாக, முதல்வர் பழனிச்சாமி கூறுகிறார் என் பின்னால் திமுக இருப்பதாக. உண்மையை சொல்ல போனால் என்னை யாரும் இயக்கவில்லை, என் பின்னால் யாரும் இல்லை.
அஞ்சவில்லை
கேரளாவில் இருக்கும் சயோனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்து கொள்ளலாம். சென்னைக்கு வருவதற்கு நான் அஞ்சவில்லை.கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையை தொடர்ந்து 5 கொலைகள் நடந்துள்ளன.
தகவல்கள்
டிசம்பர் 19-ஆம் தேதியே ஆவணப்படத்தை தயாரித்து விட்டேன். மேலும் காலம் கடத்த முடியாது என்பதால் உடனே வெளியிட்டேன். பத்திரிகையாளர் என்ற முறையில் தகவல்களை திரட்டி கொடுத்துவிட்டேன்.
சசிகலா, தினகரனை ஆதரிக்கவில்லை
இந்த சம்பவத்தில் சசிகலா அல்லது தினகரன் அல்லது முதல்வர் எடப்பாடி என யாருக்கு தொடர்பிருக்கிறது என்பதை அரசு புலனாய்வு அமைப்புகள்தான் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். சசிகலாவையும் தினகரனையும் நான் ஆதரிக்கவில்லை.
முடிவு
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவர வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் பேட்டி எடுத்துள்ளேன். அந்த மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். தன்னுடன் வர விருந்த மருத்துவர்கள் வர தயங்குகிறார்கள். ஆறுமுகசாமி ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆணைய அறிக்கை இப்படி தான் இருக்க வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார் மேத்யூ.