தேமுதிக கேப்டன் கையில் இல்லை... கட்சியிலிருந்து வெளியேறிய மாவட்டச் செயலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
சென்னை: தேமுதிக விஜயகாந்த் கையில் இல்லை என அங்கிருந்து வெளியேறிய மாவட்டச் செயலாளர் மதிவாணன் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.
மேலும், கட்சி தொடங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து தேமுதிக திசை மாறி பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
41 தொகுதிகள் கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி என்பது எந்த வகை கொள்கை என அவர் பிரேமலதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகாந்த் மகனை முன்னிறுத்தும் தேமுதிக... விருத்தாசலம் தொகுதியில் களமிறங்குகிறாரா விஜய பிரபாகரன்...?
மாவட்டச் செயலாளர்
தேமுதிகவில் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மதிவாணன் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இவர் தேமுதிகவிலிருந்து விலகியது அக்கட்சியின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. காரணம் மதிவாணன் நல்ல ஃபீல்டு ஒர்க்கர் என்பது தான்.
உடல்நிலை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 11 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அப்போதே நிலைமையின் விபரீதத்தை எல்.கே.சுதீசும், பிரேமலதாவும் உணர்ந்துகொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்காத 11 மாவட்டச் செயலாளர்களிடம் பார்த்தசாரதி தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசி வராததற்கான காரணத்தை அறிந்துகொண்டார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
எல்லோரும் உடல்நிலை, நெருங்கிய உறவினர்கள் திருமணம், உள்ளிட்ட காரணங்களை கூறியிருக்கின்றனர். இந்நிலையில் வடசென்னை தேமுதிக மாவட்டச் செயலாளர் மதிவாணன் நேற்று அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்துகொண்டார். இதில் விசித்திரம் என்னவென்றால் கடந்த 2016-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டவரும் இதே மதிவாணன் தான்.
பிரேமலதா விஜயகாந்த்
இதனிடையே தேமுதிகவிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து பேட்டியளித்த அவர், தேமுதிக இப்போது கேப்டன் கையில் இல்லை என்றும், கட்சியில் நடப்பது எதுவும் அவருக்கு தெரியாது என்றும் கூறினார். கட்சி தொடங்கப்பட்ட நோக்கம் சிதைந்து தடம் மாறி சென்றுகொண்டிருப்பதாகவும் இனியும் அங்கிருக்க வேண்டுமா என்ற கேள்வி தனக்குள் எழுந்ததால் விலகி திமுகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலாளர்கள்
மதிவாணன் அளித்த பேட்டியில் பிரேமலதா விஜயகாந்த் மீதான அவரது வருத்தம் நன்றாகவே உணர முடிந்தது. மதிவாணன் வழியில் மற்ற மாவட்டச் செயலாளர்களும் புறப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் இப்போது தேமுதிக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவட்டச் செயலாளர்களை தக்க வைப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளது தேமுதிக.