தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாட்டம் !! கால்நடைகளை வணங்கி நன்றிக்கடன் செலுத்திய விவசாயிகள்
சென்னை:தைப்பொங்கலின் இரண்டாம் நாளான இன்று கால்நடைகளை போற்றும் வண்ணம், தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல் தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வண்ணம், பொங்கல் படையலிட்டு அனைவரும் வணங்கினர்.
அதனை தொடர்ந்து 2ம் நாளில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப் பட்டது. உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.
விவசாயிகளின் நண்பன்
உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில் விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். பொங்கல் பொங்குவதால் பட்டி பெருகும் என்பது ஐதீகம்.
மாட்டு பொங்கல் கொண்டாட்டம்
அதன்படி.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாட்டு பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வேளாண்மைக்கு உதவும் மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளர்கள் கால்நடைகளை குளிப்பாட்டினர்.
மாடுகளுக்கு அலங்காரம்
பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வர்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிட்டு அழகு சேர்த்தனர். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி, திருநீறும், குங்குமப் பொட்டையும் பூசி,மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வேளாண் கருவிகள் சுத்தம்
மாடுகளுக்கு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும், உழவுக் கருவிகளை சுத்தம் செய்தும் மாட்டுப் பொங்கலுக்கு தயாராகினர். பின்னர், வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
உற்சாகம் பொங்கிய கிராமங்கள்
விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, கோவை என பல்வேறு நகரங்களிலும் மாட்டு பொங்கல் வெகு உற்சாகமாக நடைபெற்றது. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து, பொங்கல் உண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆலயத்தில் வழிபாடு
மாட்டு பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக.. வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தில் உழவுக்கு உழைக்கும் கால்நடைகளை போற்றும் வண்ணம், ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
முறுக்கு, அதிரசம்
பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதன் பின்னர் வடை, முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவை கொண்டும் பழங்கள், பூக்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆலயத்தில் உள்ள கோமாதாவுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
கோவிற்கு சர்க்கரை பொங்கல்
பின்னர் நந்திபகவானுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, கோ மாதாவிற்கு சர்க்கரை பொங்கல் கொடுக்கப்பட்டது. ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி ஜலகண்டீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டன. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.