'என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள்'.. திருமுருகன் காந்தி பதிவு
சென்னை: என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மே 17 இயக்க ஒருங்ணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஆண்டு தோறும் ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுதவிர காவிரிப் பிரச்சனை, ஸ்டெர்லைட் விவகாரம், ஹைட்ரோ கார்பன் விவகாரம், முகிலன் காணாமல் போன விவகாரம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.
இதற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் திருமுருகன் காந்தி மீது திருவல்லிக்கேணி , வள்ளுவர் கோட்டம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் எட்டு வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி சார்பில் தனித்தனியே எட்டு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்த பின்னர்.அனைத்து மனுக்களையும் தள்ளுபடிசெய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அப்போது வழக்கை தள்ளபடி செய்த நீதிமன்றம், "திருமுருகன் காந்தி மீது காவல்துறை வழக்குத் தொடர அனைத்து முகாந்திரமும் உள்ளது. அவர்குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அவரைப் பின்னால் இருந்து யாரும் இயக்குகிறார்களா என முழுமையான விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது.
என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான். pic.twitter.com/pt6hD6Qk4G
— Thirumurugan Gandhi (@thiruja) July 10, 2019
இந்நிலையில் திருமுருகன் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் "என் பின்னணியில் என் மகளை தவிர வேறு யார் இருப்பார்கள். அவளின் உலகம் களவாடப்படுவதை என்னை தவிர வேறு யார் தடுப்பார்கள். அவளின் நீர், நிலம், ஆறு, கடல், காற்று கார்ப்பரேட்டுக்கு விற்கப்பட்டு மாசுபடுவதை அப்பாவாக நான்தானே எதிர்க்கவேண்டும். அவள், அவளுடைய தலைமுறையின் உரிமைக்கான முகமே நான்" என பதிவிட்டுள்ளார்.