மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு
சென்னை: முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் சென்னை மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்தினர் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொலை செய்தனர்.
இந்த கொடூர நிகழ்வை நினைவு கூறும் விதமாக மே 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் திருமுருகன் காந்தி தலைமயில் மே 17 இயக்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மோடிக்கு வயதாகி விட்டது... எங்களுக்கு கவலை இல்லை... திருநாவுக்கரசர் பேச்சு
அந்த வகையில் முள்ளிவாய்க்கால் 10ம் ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் கடந்த மே19ம் தேதி சென்னை தியாகராய நகர் முத்துரங்கள் சாலையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய திருமுருகன் காந்தி மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக சில சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கூட்டத்தில் பேசியதற்கான வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், மாம்பலம் போலீசார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 153(ஏ), 505(வி) (11) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.