மே மாத ராசி பலன் 2020: மே மாதத்தில் மேஷம் ராசிக்காரங்களுக்கு பிரச்சினைகள் தீரும்
சென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின் நகர்வு சில ராசிக்காரர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாதம் ஆண்டுக்கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தை ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார். சனி, குரு மகரத்தில் சஞ்சரிக்கின்றனர். சனி உடன் கூட்டணியில் இருக்கும் செவ்வாய் மாத முற்பகுதியிலே கும்பம் ராசிக்கு மாறுகிறார். இதனால் பலருக்கும் நிம்மதி பெருமூச்சு ஏற்படும். மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கிரகங்களின் சஞ்சாரம் என்ன பலன்களை கொடுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று பார்க்கலாம்.
கிரகங்கள் இந்த மாதம் இடம் மாறுகின்றன. மாத பிற்பகுதியில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். செவ்வாய் கும்பம் ராசிக்கும், நீசம் பெற்றிருக்கும் புதன் மேஷம் ராசிக்கும் ரிஷபம் ராசிக்கும் இடம் மாறுகிறார். சனி வக்ரமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடம் மாற்றங்களினால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
வெயிலின் கொடுமையும் கொரோனா தாக்கவும் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த பாதிப்பு எப்போது நீங்கும் என்பதே அனைவரின் கேள்வி. மனதளவில் சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கவும் தன்னம்பிக்கை தரவும் இந்த மே மாத ராசி பலன்களை எழுதியிருக்கிறோம். மே மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் சுய ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தி அந்தாரம் எப்படி இருக்கிறது என்பது பொறுத்து சில பலன்கள் மாறுபடலாம்.
வேலையில் முன்னேற்றம்
செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே நீங்க பொதுவாகவே தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்டவர்கள். எதையும் எதிர்கொள்ளும் மனோ திடமும் கொண்டவர்கள். இப்போது உள்ள சிக்கலான கால கட்டத்தில் கிரகங்கள் உங்களுக்கு கை கொடுக்கப் போகின்றன. உங்க ஐந்தாம் வீட்டு அதிபதி சூரியன் உங்க ராசியில் உச்சமடைந்திருக்கிறார் 13ஆம் தேதிக்கு மேல் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். புதன் உங்க ராசியிலும் பின்னர் இரண்டாம் வீட்டிற்கும் செல்கிறார். ராகு மூன்றாம் வீட்டிலும் உங்க ராசி அதிபதி செவ்வாய் பத்தாம் வீட்டில் இருந்து மே 4ஆம் தேதிக்கு மேல் உங்க லாப ஸ்தானத்திற்கு வருகிறார். சனி குரு பத்தாம் வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். முன் ஜென்மத்தில் செய்த பலன்கள் மூலம் இப்போது நன்மைகள் நடைபெறும். தொழில் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குரு பார்வையால் சுப பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுய முயற்சியினால் பணம் ஈட்டுவீர்கள். கடின உழைப்பு ரொம்ப அவசியம். எதையும் கவனத்தோடு எதிர்கொள்ளுங்கள்.
லாபம் வரும்
வியாபாரம் இந்த மாதம் நன்றாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ப லாபம் வரும். வேலையை வீட்டில் இருந்து செய்தாலும் திறமையோடு எதிர்கொள்ளுங்கள். வங்கிக்கடன் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், வேலைப்பளு அதிகமாக இருக்கும். கடமையை செய்யுங்க பலன் தானாக தேடி வரும். உங்க கவனம் முழுவதும் வேலையில் மட்டுமே இருக்கும். குரு பார்வை இருப்பவதால் வருமானம் அதிகரிக்கும்.
பிரச்சினை தீரும்
இப்போ இருக்கிற சூழ்நிலையில் நிறைய பேருக்கு வேலை போகிறது. ஆட்குறைப்பு சம்பள குறைப்பு நடைபெறுகிறது எனவே சிலர் தப்பி பிழைக்கலாம் என நீங்க வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் குற்றம் குறைகளை வெளியே பகிரங்கமாக சொல்லாதீங்க. உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்க. சம்பள பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைகள் வரலாம் கவனம். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி பேச்சில் கருத்து வேறுபாடு ஏற்படும். மனசு விட்டு பேசுங்க விட்டு கொடுத்து போங்க. வீட்ல எதுக்கு ஈகோ எதுக்கு பார்க்கணும்.
தடைகள் விலகும்
உங்க எதிர்பார்ப்புகள் அதிகமாகும். தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் நடைபெறும். உடன் பிறந்த சகோதரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் புத்திக்கூர்மை அதிகரிக்கும். கல்வியில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிதி நிலையில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும்.
பரிகாரம் என்ன
மே 8,9ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. எந்த வம்பு வழக்குக்கும் போகாதீங்க பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வரும். வாக்கு கொடுக்காதீங்க மாட்டிப்பீங்க. மே 11 சனி வக்ரமடைகிறார். மே 14 குரு வக்ரமடைகிறார். உங்க ஜனன ஜாதகத்தில் குரு எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்து நன்மைகள் நடைபெறும். வயதானவர்களுக்கு உடல் ஊனமுற்றவர்கள், பலஹீனமானவர்களுக்கு உணவு வாங்கி கொடுங்க. அக்னி நட்சத்திர காலத்தில் நீர் மோர், பானகம் கொடுங்க.