மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க பரிசீலனை.. டெல்டாவிற்கு சிறப்பு திட்டங்கள்.. முதல்வர் அதிரடி!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க 11 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரிசையாக இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒவ்வொரு மாவட்டங்களாக நடந்து வருகிறது.
இன்று நாகப்பட்டினத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு தலைமையேற்று தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார். டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து அவர் பேசினார்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி தனது பேச்சில், தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆகியுள்ளது. இதனால் மாவட்டங்களை எளிதாக நிர்வகிக்க முடியும். அரசு நிர்வாகம் எளிதாகும். மாவட்டங்கள், கிராமங்கள் இதனால் எளிதாக வளர்ச்சி அடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
என்ன சொன்னார்
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.
டெல்டா நலத்திட்டம்
டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து இருக்கிறோம். டெல்ட்டாவிற்கு இன்னும் நிறைய புதிய திட்டங்களை கொண்டு வருவோம். 11 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது சரித்திர சாதனை.மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க மீதமுள்ள இடங்களில் 10 மருத்துவ கல்லூரிகள் விரைவாக அமைக்கப்படும்.
மருத்துவ கல்லூரிகள்
இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் தமிழக மருத்துவ துறையில் புதிய உயரத்தை தொடும். மருத்துவ துறையில் நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க புதிய மருத்துவ கல்லூரி கொண்டு வரப்படுகிறது. ஏழை மக்களும் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அதற்காகவே மருத்துவ கல்லூரிகளை கொண்டு வருகிறோம். உயர் கல்வியில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.