வன்னியருக்கு 10.5%, சீர் மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியருக்கு 10.5 விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வன்னியர்கள், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு வேலைகளிலும், கல்வி சேர்க்கையிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சூப்பர்.. இந்த 5 கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி..!
அதன்படி வன்னியர் 10.5%, சீர்மரபினர் 7%, இதர மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு முதல்
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு முறையைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடப்ப ஆண்டு முதலே இந்தப் புதிய சிறப்பு ஒதுக்கீடு முறையில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கு வழங்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள், வன்னியர்கள், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது.
முதல்வர் உத்தரவு
அதனடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க விரிவாக ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். அதன்படி, சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டை 26.2.2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று முதல்வர் வெளியிட்டுள்ளார்.
புதிய இட ஒதுக்கீடு முறை
இந்தாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி மாணவர் சேர்க்கையானது மேற்கூறிய சிறப்பு ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது. புதிய இட ஒதுக்கீடு முறையின்படி அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5% இட ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.