சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர் ஐபிஎஸ், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத் துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பி.கந்தசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்று 9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாகப்பிரிவில் சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து வந்த கந்தசாமி, லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உளவுத் துறை ஐஜியாக பொறுப்பு வகித்த ஈஸ்வர மூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு உளவுத் துறை ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அந்தஸ்து பெற்றார் ஈஸ்வரமூர்த்தி. சிபிஐ மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. உண்மையான தகவல்களை மட்டுமே தருபவர் என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் அதே துறையில் உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுத்துறை டிஜிபியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சிறப்பு அதிரடி படை கூடுதல் டிஜிபியாக இருந்த ரவி, சென்னை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக எம். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பி சரணவன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உளவுத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூர் இணை ஆணையர் ஆர். திருநாவுக்கரவு சிஐடி 1 பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சாமிநாதன் ஐபிஎஸ் சிஐடி 2 பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.