ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்
தீர்மானம் 21
தமிழ் ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று ஒழித்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன அழிப்பு செய்த சிங்களக் கொலைவெறி அரசின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், சர்வதேசச் சமூகம் மௌனத்தைக் கடைப்பிடிப்பது வேதனை அளிக்கின்றது.
ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டு, இனப்படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்;
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கின்ற சிங்கள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்; ஈழத் தமிழ் மக்களின் விவசாய நிலங்களையும் வீடுகளையும் சிங்கள இராணுவத்தின் துணைகொண்டு முறையற்ற வகையில் கபளீகரம் செய்த சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழர்களின் உடைமைகளைத் திரும்பக் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, இலங்கை அரசு இதுவரை ஏற்கவில்லை.
தமிழ் ஈழ விடுதலைக்காக 30 ஆண்டு காலம் தந்தை செல்வா தலைமையில் அமைதிவழி அறப்போராட்டங்களும், மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் வீரம் செறிந்த மறப் போராட்டமும் நடந்தது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தனர்.
இந்நிலையில், தமிழர்களுக்கு மாகாண கவுன்சில் போன்ற ஒப்புக்கு சில அரசு அதிகாரங்களை வழங்குவது எந்தவிதத்திலும் ஈழத்தமிழர் சிந்திய இரத்தத்திற்கு ஈடாகாது. எனவே, சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு இருக்கின்ற பொதுவாக்கெடுப்பு ஒன்றை, ஈழத்திலும், உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்களிடமும் நடத்த வேண்டும் என்று, 2011 ஜூன் 1 ஆம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான மாநாட்டில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன் முதலாக எடுத்து உரைத்தார்கள். இக்கோரிக்கையை நிறைவேற்றிட, உலகத் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
தீர்மானம் 22
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், படைக்கல வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 41 படைக்கலத் தொழிற்சாலைகள், இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளுக்குத் தேவையான போர் வாகனங்கள், கனரக பீரங்கிகள், இலகு ரக மற்றும் நடுத்தரத் துப்பாக்கிகள், வெடி பொருட்கள், பாராசூட் சிப்பாய்களுக்கு தேவையான படை உடைகள் மற்றும் இதர பொருட்களை தரமாகவும், உரிய நேரத்திலும் வழங்கி வருகின்றது.
இந்தத் தொழிற்சாலைகளில், நாடு முழுவதும் சுமார் 85,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். 41 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய படைக்கல வாரியம், ஆண்டுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.
யுத்த காலங்களில் இராணுவத்திற்குத் தேவையான அதிகப்படியான ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்களை படைக்கல தொழிற்சாலைகள் மிக விரைவாக வழங்கி வந்துள்ளது.
படைக்கலத் தொழிற்சாலைகள் இந்திய நாட்டுக்கு மிகப் பெரிய செல்வம் என்பதை முன்பு ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் நன்றாக உணர்ந்து இருந்தன.
தற்போது மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வரும் தவறான கொள்கை முடிவுகளால், ஆயுத தளவாட தொழிற்சாலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் படைக்கல தொழிற்சாலைகளை வணிக நிறுவனங்களாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். அரசுத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றுவது காலப்போக்கில் தொழிற்சாலைகளை நலிவடையச் செய்து, பெரும் மதிப்பு கொண்ட நிலம் உள்ளிட்ட சொத்துக்களைத் தனியாருக்கு தாரை வார்த்துப் படைக்கலத் தொழிற்சாலைகளை முற்றிலும் அழித்கு ஒழித்து விடும்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், புதிய ஆயுத தளவாடங்களைக் கண்டுபிடித்தல், மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்வது அரசு துறையால் மட்டுமே சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் செயற்கைகோள் ஏவப் பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பத்தை வழங்க மறுத்தபோது, இந்திய விஞ்ஞானிகள் தங்களது கடின உழைப்பால் ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து சாதனை படைத்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான சீனா ஆயுதத் தளவாடங்களை இறக்குமதி செய்வதில் உலகில் முதல் இடத்தில் இருந்தது. பொது வணிகத்தில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் சீனா, அதற்கு நேர் மாறாக, ஆயுத உற்பத்தியில் அரசுத் துறைகளை மட்டுமே ஊக்கப்படுத்தி வருகின்றது. அதற்குக் கிடைத்த பலன், சீனா இராணுவம் அனைத்து நவீன ஆயுதத் தளவாடங்களிலும் தன்னிறைவு பெற்ற பலம் பொருந்திய இராணுவம் மட்டும் அன்றி, பிற உலக நாடுகளுக்கும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருவதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆயுதத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி 15 ஆண்டுகள் கடந்தபின்னரும், தனியார் நிறுவனங்கள் எவ்விதமான முன்னேற்றமும் காணவில்லை.
கடந்த காலங்களில் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர்களாக பணியாற்றிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஏ.கே.அந்தோணி, மனோகர் பரிக்கர் ஆகியோர், இந்திய படைக்கல தொழிற்சாலைகள் கார்ப்பரேஷன் அல்லது தனியார் மயம் ஆகாது என எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்து இருக்கின்றார்கள். அந்த உத்தரவாதத்தை பாஜக அரசு மீறுவது கவலை அளிக்கின்றது. தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 6 படைக்கலத் தொழிற்சாலைகளில் 20,000 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். மறைமுகமாக பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறுகின்றனர். தனியார் மயம் ஆக்குவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
எனவே, படைக்கலத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட்டுவிட்டு, தொடர்ந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள மறுமலர்ச்சி தி.மு.க. மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 23
2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயம் ஆக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருக்கின்றது. ஆனாலும், இரயில்வே துறை தனியார் மயம் ஆகாது என்று இரயில்வே அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் கூறி வந்தனர்.
கடந்த மே மாதம் இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்ற பின்பு, '100 நாள் செயல் திட்டம்' என்ற பெயரில், இரயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நெரிசல் இல்லா வழித் தடங்களிலும், சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும், தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை-மும்பை, மும்பை-டெல்லி, டெல்லி-ஹௌரா, ஹௌரா-சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் தொடரிகளை ஓட்டுவதற்கு உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரிமியம் கட்டண இரயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே இரயில்வேத் துறைக்குச் சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்டு உள்ளன. பயணச் சீட்டு வழங்குவதையும், இரயில் பெட்டி தயாரிப்பு, இரயில் இயந்திரம் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் ஏழு உற்பத்தி ஆலைகளையும், இரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க இரயில்வே துறை முனைந்துள்ளது.
இந்நிலையில், இரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் காரணம் கூறி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் ரூபாய் 600 கோடி வரை திரட்டுவதற்கு இரயில்வே துறை முடிவு எடுத்து இருக்கின்றது.
இரயில்வே துறையைப் புதுப்பிக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 இலட்சம் கோடி முதலீடு தேவைப்படுகின்றது; ஆனால் ஆண்டுக்கு 1.6 இலட்சம் கோடி மூலதனம் இடும் சக்தி மட்டுமே இரயில்வே துறையிடம் இருப்பதால், தனியார் மூலதனம் தேவை என்று பா.ஜ.க. அரசு தனியார் மயத்தை நியாயப்படுத்துகின்றது.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரயில்வே துறையைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, பொதுத்துறை-தனியார் கூட்டின் மூலம் திரட்டப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்; ஏழை எளிய மக்களுக்கு இரயில் பயணம் என்பது எட்டா கனியாக ஆகிவிடும். சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயரும்; அதனால், விலைவாசி உயரும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, முன்பு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மறுமலர்ச்சி மாநாடு வலியுறுத்துகிறது.
இவ்வாறு மதிமுக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்ப்ட்டுள்ளன.