ராஜ்யசபா தேர்தல்- வைகோ வேட்புமனு ஏற்பு.. மதிமுகவினர் உற்சாகம்.. !
Recommended Video
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனு ஏற்கப்பட்டதாக சட்டப் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
ராஜ்யாபா தேர்தலில் திமுக ஆதரவுடன் வைகோ போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனுவையும் அவர் தாக்கல் செய்திருக்கிறார்.
ஆனால் தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம். இதனால் வைகோவின் ராஜ்யசபா தேர்தல் வேட்பு மனு ஏற்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.
வைகோவும் தமது மனு ஏற்கப்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் அதையும் எதிர்கொள்ள திமுகவின் என்.ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார்.
மதிமுகவினர் உற்சாகம்
முன்னதாக வைகோவின் மனு நிராகரிக்கப்படலாம் என்றஅச்சம் கிளப்பப்பட்டது. இதன் காரணமாக திமுகவும் என்ஆர் இளங்கோவை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தது. ஒரு வேளை வைகோ மனு நிராகரிக்கப்பட்டால் பாஜகவின் திட்டத்தில் மண் அள்ளிப் போடும் வகையில் இந்த திட்டத்தை செய்திருந்தது திமுக. இதனால் மதிமுகவினர் பெரும் ஏமாற்றமடைந்தனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமே என்ற அச்சத்தில் அவர்கள் இருந்தனர். ஆனால் அப்படி நடக்காமல், வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் வைகோ எம்பி ஆவது உறுதியாகி விட்டது.
பல காலமாக சட்டசபை, லோக்சபா, ராஜ்யசபா என எதிலுமே உறுப்பினராக இல்லாமல் இருந்து வந்தார் வைகோ. இதனால் அவரது முழக்கமெல்லாம் சாலைகளிலும், மேடைகளிலுமே முடங்கிப் போயிருந்தன. இப்போது அவரது குரல் டெல்லியில் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கப் போகிறது. நாடாளுமன்றம் சூடு கிளப்ப் போகிறது என்பதும் மதிமுகவினரின் உற்சாகத்துக்கு இன்னொரு காரணம்.