’துரோகி’ தவறை ஆயிரம் முறை செய்வேன்..! எவ்வளவு உதவி பண்ணிருக்கேன் பாருங்க! பட்டியலிட்ட துரை வைகோ!
சென்னை : எந்த உழைப்பையும் கொடுக்காமல் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. தாராளமாக வெளியே போகலாம் என்று கோவில்பட்டியில் பேசினேன். இது தவறு என்றால், இந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன் என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கடுமையாக பதிலளித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோவின் செயல்பாடுகள்,பேச்சுகள் பல்வேறு மூத்த நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக தொண்டர்களே வெளிப்படையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட மதிமுக கூட்டத்தில் துரை வைகோ பேசிய போது , வருங்காலங்களில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் தொடரலாம் எனவும் இதில் விருப்பமில்லாதவர்களுக்கு மற்றொரு கதவு திறந்தே உள்ளது என கூறியது கட்சியின் மூத்த நிர்வாகிகள்,தொண்டர்களிடையே மிகுந்த அதிர்வலைகளையும் உண்டாக்கியது.
மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம்! அடாத மழையிலும் விடாத ராகுல் காந்தி! மிரண்டு போன கர்நாடகா!
துரை வைகோ
வயதானவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற ரீதியில் துரை வைகோ பேசியதாக சமூக வலைதளங்களில் கருத்துப் பரவி நிலையில் மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி தனது பதவியை விட்டு விலகினார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக கூண்டோடு கலைக்கப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனும் மதிமுக தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ கூறியிருந்தார்.
முகநூலில் பதில்
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை துரை வைகோ தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில்,"என்னை விமர்சிப்பவர்களுக்கு, என் கழகப் பணிகளே பதில்..! துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற தன் கணவரை காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வர உதவுங்கள் என்று, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்றப் பெண்மணி, மங்களூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சம்பத் அவர்களின் மூலமாக, பெரம்பலூரில் என்னை நேரில் சந்தித்து மனு அளித்தார். அடுத்து, முன்னாள் தேனி மாவட்டச் செயலாளர் சகோதரர் சந்திரன் அவர்களின் நெருங்கிய உறவினர் செல்வக்குமார் உதவி கேட்டார் செய்தேன்.
48 மணி நேரம்
அமெரிக்காவில் பணியாற்றிவரும் பொள்ளாச்சியை சேர்ந்த கழகத் தோழர் குரு அவர்களுக்கு உதவி செய்துள்ளேன். 48 மணி நேரத்தில் நான் மேற்கொண்ட பணிகள் இவை. கட்சியில் பொறுப்பில் இருந்தாலும், பொறுப்பில் இல்லாவிட்டாலும் இயக்கத் தோழர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். இவற்றை எல்லாம் நான் வெளியில் சொல்வதும் இல்லை. இப்படி பதிவிடுவதும் இல்லை. சொல்ல வேண்டிய நிலை என்பதால் இதைப் பதிவிடுகிறேன்.
ஆயிரம் முறை செய்வேன்
எந்த உழைப்பையும் கொடுக்காமல் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. தாராளமாக வெளியே போகலாம் என்று கோவில்பட்டியில் பேசினேன். இது தவறு என்றால், இந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன். என் பேச்சை திரித்து பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் எழுதுவதற்கு காரணமாக இருந்து வரும் துரோகிக்கு, என் கழகப் பணிகளையே பதிலாகத் தருகிறேன்." என கூறியுள்ளார்.