கடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்
Recommended Video
சென்னை: ராமநாதபுரத்தை சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்ற இளைஞர் வைகோவை விமர்சித்து ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த அரு.சுப்பிரமணியன் என்பவரை கட்சியில் இருந்து வைகோ நீக்கிவிட்டார். இதையடுத்து வைகோவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர் மதிமுக நிர்வாகிகளை கொதிப்படைய வைத்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்காக வைகோ போராடுவதை பார்த்து சுப்பிரமணியன் கடந்த 2012-ம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார். படித்தவர், பணத்திற்கும் பஞ்சமில்லாதவர், துடுப்பாக செயல்படுவார் என லோக்கல் நிர்வாகிகள் பரிந்துரை செய்ததை அடுத்து, சுப்பிரமணியனுக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தார். ராமநாதபுரத்தில் டுவீலர் ஏஜென்ஸீஸ் வேறு நடத்திக்கொண்டிருப்பதால் சுப்பிரமணியனுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் நல்ல பரிச்சயம் உண்டு,
இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை என்றும், அமமுக வேட்பாளருடன் சுற்றிக்கொண்டிருந்தார் எனவும் தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன. இதையடுத்து இது தொடர்பாக வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது.
இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன் என்கிற வகையில், அரு. சுப்பிரமணியன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், கடனாளிஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.