கம்மிய குரல்... தளர்வடைந்த தேகம்... ஆனாலும் பிரச்சாரத்தில் வைகோ
Recommended Video
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவை கூட பொருட்படுத்தாமல் விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வைகோ என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது கர்ஜனை பேச்சு தான். ஓங்கி உரக்க அடிவயிற்றிலிருந்து வார்த்தைகளை உமிழ்ந்து கூட்டத்தை தனது பேச்சால் கட்டிபோடுபவர் அவர். மேடையில் அவர் பேசும் போது, ஒரு தோள்பட்டையை உயர்த்தி தனது கருப்புத்துண்டை இரண்டு கைகளாலும் கழுத்துக்கு பின்னால் அடிக்கடி இழுத்து விடுவது அவரது ஸ்டைல்.
இந்நிலையில் விக்ரவாண்டியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரின் உடல்மொழி, பேச்சுவழக்குகளில் மாற்றம் தெரிந்தது. நின்ற இடத்தில் அசையாமல், கம்மிய குரலில் மென்மையாக பேசினார் வைகோ. காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவும், மருத்துவர்களின் கண்டிப்பும். அதிர்ந்து பேசவேண்டாம் என்றும், கோபமே கூடாது எனவும் மருத்துவர்களும், குடும்பத்தினரும் அறிவுறுத்தியுள்ளதால் வைகோ அதிர்ந்து பேசவில்லை எனக் கூறப்படுகிறது.
உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள் பிரச்சாரத்திற்கு கூட வேண்டாம் என திமுக தரப்பில் சொல்லப்பட்டதாகவும், இருப்பினும் மனது கேட்காமல் வைகோ பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முடிவெடுத்தாராம். அவரை பார்த்துக்கொள்வதற்காக அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். இதனிடையே விக்ரவாண்டி தொகுதிகுட்பட்ட கெடாரில் பேசிய வைகோ, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றஞ்சாட்டினார்.
பல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே!
மேலும், நீட் தேர்வால் தமிழகத்தில் 7 மாணவிகள் உயிரிழந்ததற்கு தமிழக அரசு தான் காரணம் எனத் தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் மத்தியில் எதிர்ப்பார்க்கப்பட்ட அரசு அமையாததால், அப்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக கூறினார்.