வைகோவுக்கு மட்டும் ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்... ஜான் ஏறினால் முழம் சறுக்கும் துயரம்!
ராஜ்ய சபாவுக்கு செல்வதில் தொடர் தோல்வியை வைகோ சந்தித்து வருகிறார்
Recommended Video
சென்னை: வைகோவுக்கு மட்டும் ஏன் இப்படி தொடர்ச்சியாக நடக்கிறது.. ஜான் ஏறினால் முழம் சறுக்குவதே மதிமுக பொதுச்செயலாளரின் நிலையாகவே காணப்படுகிறது.
வைகோ ஒரு சிறந்த அரசியல்வாதி, நாடாளுமன்றவாதி, அரசியல்வாதிகளிடையே அறிவுப் பூர்வமாக பேசுகிற அறிவாளி. சிறந்த பேச்சாளர், சமூக அக்கறை நிறைந்தவர், சமூகப் போராளி. மண்ணை பாதிக்கும் எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு முதல் ஆளாக வந்து நிற்கும் தலைவர்களில் முதன்மையானவர் வைகோதான்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நிறைய சறுக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. 2002-ம் ஆண்டு தன் கட்சியின் பொதுக்கூட்டத்தில் "விடுதலை புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்" என்று சுப்பிரமணியசாமிக்கு பதிலை சொல்லிவிட்டு, அமெரிக்கா கிளம்பி சென்றார்.
ஜெயலலிதா
ஆனால் திரும்பி வருவதற்குள் விமான நிலையத்தில் வைத்தே பொடா சட்டத்தில் கைதானார். கைது செய்தது ஜெயலலிதா அரசு. ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார் வைகோ. வைகோவின் வளர்ச்சியை முடக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டது.
தோல்வி
அதேபோல, 2014-ல் விருதுநகரில் பாஜகவுடன் அதாவது தேசிய அளவிலான கூட்டணியுடன் கை கோர்த்து போட்டியிட்டபோதிலும் அவருக்கு தோல்விதான் கிடைத்தது. மோடி அலை தமிழகத்தில் எடுபடவில்லை என்பதாலோ என்னவோ, வாக்கு எண்ண ஆரம்பிக்கும்போதிருந்தே பின்தங்கிதான் இருந்தார். அந்த தேர்தலில் மிக சொற்பமான வாக்குகளில் தோல்வியடைந்தார். அவர் வேண்டும் என்றே தோற்கடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
விஜயகாந்த்
பின்னர் சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார். திமுகவுடன் சேரவிருந்த விஜயகாந்த்தையும் தடுத்து தனது கூட்டணிக்குள் கொண்டு வந்தார். ஆனால் அந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை இக்கூட்டணி பெற்றது. வைகோ மீது கடும் விமர்சனங்களும் வந்து விழுந்தன.
ராஜ்ய சபா சீட்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றார் வைகோ. 3 சீட் கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரே ஒரு சீட், அதுவும் உதயசூரியன் சின்னம் என்று முடிவாகி எம்பி தேர்தலிலும் சோபிக்க முடியாமல் போய்விட்டது. வேண்டுமானால் ஒரு ராஜ்ய சபா சீட் தருகிறோம் என்று சொல்லி அதில் வைகோ தற்போது போட்டியிடவுள்ளார்.
அப்பீல்?
இந்த நிலையில்தான் இன்றைய தேச துரோக வழக்கு தீர்ப்பு வந்து மதிமுகவினரை அதிர வைத்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்து அதில் ஸ்டே கிடைத்தால் மட்டுமே வைகோவால் தேர்தலில் போட்டியிட முடியும். இல்லாவிட்டால் சிரமம்தான்.
முட்டுக்கட்டை
வைகோவை பொறுத்தவரை, எவ்வளவோ முட்டி மோதி போராடினாலும் அவரால் டெல்லி பக்கம் போக முடியாத நிலைமையே இருந்து வருகிறது. அது திமுகவோடு இருந்தாலும் சரி, அதிமுகவோடு இணைந்திருந்தாலும் சரி.. தொடர்ச்சியான முட்டுக்கட்டையில் வைகோ சிக்கி வருவதை தமிழகம் பார்த்து வருகிறது. ஆனால் ஏன் இந்த நிலைமை என்றுதான் புரியவில்லை!