மதிமுகவுக்கு 2 சீட்டாம்.. திருச்சி, ஈரோடு கிடைக்கப் போகுதாம்.. குஷியில் தாயகம்!
Recommended Video
சென்னை: திமுக கூட்டணியில் நிறைய சீட்களை் கேட்டு வரும் மதிமுக தற்போது 2 சீட்டாவது கொடுங்கள் என்று கேட்டுள்ளதாம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை இந்திய பிரதமர் ஆக்கியே தீருவேன் என்று சபதமேற்று இரவு பகலாக உழைத்தவர் மதிமுக பொது செயலாளர் வைகோ. அதன் பின்னர் மோடியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, பாஜகவினர் செய்த ஏளனம் இவற்றினால் மனம் வெறுத்துப் போனவர் 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றினார். அதோடு விஜயகாந்தை முதல்வர் ஆக்கியே தீருவது என்று தீயாய் வேலை செய்தார்.
தேர்தலுக்குப் பிறகு அந்த அணியும் உடைந்து சிதற தன் கவனத்தை மீண்டும் திமுக முகாமை நோக்கித் திருப்பினார். இம்முறை ஸ்டாலினை எப்படியும் முதல்வர் ஆக்குவது என்று வேகம் கொண்ட வேங்கையாய் வேட்டையை துவங்கியுள்ளார். நாங்களும் திமுக அணியில்தான் இருக்கிறோம் என்று வாலண்டியராக வந்து வண்டியில் ஏறி துண்டு போட்டு இடம் பிடித்து வைத்திருந்தார். அப்போது திடீரென்று சடன் பிரேக் போட்டது போல திமுக பொருளாளர் துரைமுருகன் எங்கள் அணியில் மதிமுகவோ, விடுதலை சிறுத்தைகளோ இல்லையென்றார். இதைக் கேட்டு கொதித்த வைகோவின் கோபக் கனல் கிரேக்கம் வரை தெறித்தது. இருந்தாலும் புஷ்வாணம் ஆகியது. நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை திமுக தலைமை விளக்க வேண்டும் என்றார். உடனடியாக ஸ்டாலினையும் சென்று பார்த்தார். ஆனால் ஸ்டாலினோ திமுக அணியில் வைகோ இருக்கிறாரா இல்லையா என்பதை கூறாமலேயே கடந்து சென்று விட்டார்.
இருந்தாலும் திமுக அணியில் தொடர்வதாக கூறிக் கொண்ட வைகோ திமுக அணியுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். தற்போது மதிமுக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றை தங்களது தோழமை கட்சிகளாக ஏற்றுக்கொண்ட திமுகவும் இந்த கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது மதிமுக தங்களுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதை ஆரம்பத்திலேயே மறுத்துவிட்ட திமுக 2016 –சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு சதவீதமான 0.9 ஐ சுட்டிக் காட்டியுள்ளது. இதன் பின்னர் மூன்று தொகுதிகளையாவது ஒதுக்குங்கள் என்று கோரியுள்ளனர். ஏற்கனவே காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதையும், விசிக, கம்யூனிஸ்ட்கள் என்று பிற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் இரண்டு தொகுதிகளையாவது கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என்று இறுதியில் விடாப்பிடியாக நின்றுள்ளது மதிமுக. ஆனால் திமுகவோ தாங்கள் குறைந்தது 25 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்று விரும்புவதால் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளது ஆனால் மதிமுகவோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டுவிட்டு இப்போது ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டால் மரியாதையாக இருக்காது அதோடு கட்சியில் உள்ள நிர்வாகிகளையும் சமாளிக்க முடியாது என்பதை தெளிவு படுத்தியுள்ளது.
ஒரு தொகுதியை வாங்கிவிட்டு திமுகவோடு தேர்தலில் சேர்ந்து பயணிக்க நிர்வாகிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியதை ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டாராம். அதன் பின்னரே இப்போது மதிமுகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. திருச்சி தொகுதியும், ஈரோடு தொகுதியும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.