ஒவ்வொரு தேர்தலிலும் இதே அக்கப்போர்... 1996 முதல் கூட்டணி விவகாரத்தில் பாடாய்படும் வைகோ
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வரை ஒரு கூட்டணியில் இருப்பதும் பின்னர் தேர்தலுக்கு சற்று முன்னர் கூட்டணியில் இருந்து வெளியேறி பரபரப்பை கிளப்புவதும்தான் மதிமுகவின் இதுவரையிலான தேர்தல் வரலாறாக நீடித்து வருகிறது. இப்போதும் சட்டசபை தேர்தல் நேரத்தில் திமுக அணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையில் வைகோ தரப்பு சலசலப்பை காட்ட தொடங்கிவிட்டது.
1996 சட்டசபை தேர்தல்தான் மதிமுக எதிர்கொண்ட முதலாவது களம். அப்போது திமுக, அதிமுக இரண்டையும் சமமாக விமர்சித்தார். அந்த காலகட்டத்தில் திமுக- அதிமுகவுக்கு மாற்று மதிமுகதான் என கர்ஜித்தார் வைகோ. அந்த தேர்தலில் முதலில் பாமகவுடன் கூட்டணிக்கு வைகோ முயற்சித்தார். ஆனால் இந்த முயற்சி கைகூடவில்லை. இதனால் சிபிஎம், ஜனதா ஆகியவற்றுடன் மதிமுக கூட்டணி வைத்தது. மதிமுக அப்போது வெற்ற வாக்குகள் 5.8%
அதிமுக-பாஜக அணி
1998 லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக அணியில் இடம்பெற்றார். அப்போது சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதாவும் இந்த அணியில் இடம்பெற்றது. 3 தொகுதிகளில் மதிமுக வென்றது. வைகோ லோக்சபா எம்.பி.யானார். 1999 லோக்சபா தேர்தலில் திமுக-பாஜக அணியில் வைகோ இணைந்தார். 4 லோக்சபா தொகுதிகளில் வென்று மதிமுகவின் 2 பேர் மத்திய அமைச்சர்களானார்கள். 2-வது முறையாக வைகோ, லோக்சபா எம்.பி.யானார்
திமுக பாஜக அணி
2001 சட்டசபை தேர்தலிலும் திமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பிடித்தார் வைகோ. பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குகிறீர்களோ அதே எண்ணிக்கையில் மதிமுகவுக்கு தொகுதிகள் வேண்டும் என மல்லுக்கட்டினார் வைகோ. ஒருவழியாக மதிமுகவுக்கு திருப்திகரமான தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால் அடம்பிடித்து கேட்ட 3 தொகுதிகள் கிடைக்கவில்லை என கோபப்பட்டு கூட்டணியைவிட்டு வெளியேறினார் வைகோ. அந்த தேர்தலில் பாஜகவுடன் நட்பு பாராட்டிய வைகோ, அந்த கட்சி போட்டியிட்ட இடங்களைத் தவிர எஞ்சிய இடங்களில் களம் கண்டது. ஆனாலும் மதிமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. அப்போது மதிமுகவின் வாக்கு சதவீதம் 4.7% ஆக குறைந்தது.
திமுக-காங். அணி
2004 லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் இணைந்தார் வைகோ. அந்த தேர்தலில் 3 இடங்களில் மதிமுக வென்றது.
ஜெயலலிதா- வைகோ
2006 சட்டசபை தேர்தலில் திமுகவிடம் 35 தொகுதிகள் கேட்டார் வைகோ. இது மறுக்கப்பட்டதால் அன்பு சகோதரி ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் இடம்பிடித்தார் வைகோ. அவர் விரும்பியபடியே 35 தொகுதிகளையும் கொடுத்தார் ஜெயலலிதா. இத்தேர்தலில் 6 எம்.எல்.ஏக்களை மதிமுக பெற்றது. அவர்களில் சிலர் பின்னர் திமுகவுக்கு போய்விட்டனர். மதிமுகவின் வாக்கு சதவீதமும் 5.9% ஆனது. 2009 லோக்சபா தேர்தலிலும் அதிமுக அணியில்தான் வைகோ இருந்தார். அப்போது 4 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் ஈரோடு லோக்சபா தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது.
தேர்தல் புறக்கணிப்பு
2011 சட்டசபை தேர்தலிலும் அதிமுக அணியில்தான் வைகோ இருந்தார். மீண்டும் 35 தொகுதிகளைக் கேட்டார் வைகோ. ஆனால் ஜெயலலிதா இம்முறை கறார் காட்டினார். சற்று இறங்கிப் போன வைகோ 21 தொகுதிகளை எதிர்பார்த்தார். ஆனால் ஜெயலலிதா அசையவில்லை. கடைசி முயற்சிகளில் ஏற்கனவே வென்ற தொகுதிகளை ஏற்றுக் கொள்ள சொன்னது அதிமுக தலைமை. வெறுத்துப் போன வைகோ சட்டசபை தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
வைகோவின் மநகூ
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணிக்குதான் மதிமுக போகும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திடீரென மக்கள் நலக் கூட்டணி எனும் ஜோதியில் ஐக்கியமாகி அதிர்ச்சி தந்தார் வைகோ. மநகூவில் 29 இடங்களில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட மதிமுக ஜெயிக்கவும் இல்லை.
ராஜ்யசபா எம்பி
இதன்பின்னர் திமுகவின் நெருங்கிய கூட்டணி கட்சியாகவே வலம் வந்தது மதிமுக. இதனால் 2019 லோக்சபா தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்றது மதிமுக. ஈரோடு தொகுதியில் மதிமுக கணேசமூர்த்தி வென்றார். வைகோவை திமுக ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைத்தது. இப்போதைய சட்டசபை தேர்தலில் வைகோ எதிர்பார்த்த தொகுதிகளை ஒதுக்க திமுக மறுத்தது ஒருபக்கம்; உதயசூரியனில் போட்டியிட்டாக வேண்டும் என்ற நெருக்கடி இன்னொருபக்கம். இதனால்தான் சலசலப்பை அவ்வப்போது வைகோ காட்டி வருகிறார். இப்போதுவரை திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? என்பதும் உறுதி இல்லை. அல்லது கடந்த காலங்களைப் போல சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு எனும் அஸ்திரத்தை கையில் எடுப்பாரா வைகோ என்பதும் தெரியவில்லை.
புரியாத புதிர்!