பிரதமர் குறித்து பேஸ்புக்கில் அவதூறு படம்.. மதிமுக நிர்வாகி சத்யராஜ் திடீர் கைது
Recommended Video
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி கையில் திருவோடு ஏந்தியபடி உள்ள அவதூறான படத்தை சமூகவலைதளங்களில் பரப்பிய மதிமுக நிர்வாகி சத்யராஜ் கைது செய்யப்பட்டார்.
காவிரி, முல்லை பெரியாறு, விவசாய கடன் தள்ளுபடி, மீனவர்கள் பிரச்சினை, நீட், ஹைட்ரோ கார்பன், மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரானதை கடைப்பிடித்துள்ளது. இதனால் மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
அதிலும் கஜா புயல் பாதிப்பை பார்வையிடாமல் பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் இருந்தது.
மதுரை வந்த மோடி
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு மோடி வருவதை அறிந்த எதிர்க்கட்சியினர் மோடிக்கு எதிராக கருப்பு கொடியை காட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் மோடி மதுரை வந்தார்.
கருப்பு பலூன்கள்
அப்போது மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் ஆகியன கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்துக்கு மோடி வந்ததை அறிந்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டார்.
கைது
இந்த நிலையில் சீர்காழி மதிமுக நகரச் செயலாளர் சத்யராஜ் என்பவர் பிரதமரின் கையில் திருவோடு ஏந்தி நிற்கும்படி ஒரு புகைப்படத்தை சித்தரித்து அதை பேஸ்புக்கில் 24-ஆம் தேதி பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பினார். இது வைரலானதால் இது குறித்து தமிழக பாஜக போலீஸில் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பரபரப்பு
அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.