மதிமுகவில் துரை வையாபுரி... இழுக்கும் நிர்வாகிகள்... தடுக்கும் வைகோ...!
சென்னை: வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சிக்குள் அழைத்து வருவதற்கான பணிகளை மதிமுகவினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளார்கள்.
ஆனால், இதில் தனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் அது சரியாக இருக்காது எனவும் வைகோ தயக்கம் காட்டுகிறாராம்.
இதனிடையே கட்சியின் எதிர்க்கால நலன் கருதி இந்த விவகாரத்தில் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வைகோவிடம் மதிமுகவினர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
குறைந்த வட்டியில் கடன்.. அதிக கொள்முதல் விலை நிர்ணயம்.. விவசாயிகளுக்கு மத்திய அரசு செம அறிவிப்பு!
போர்க்குரல்
திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசையில் இருந்த வைகோ, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அங்கிருந்து வெளியேறி 1993-ல் மதிமுகவை தொடங்கினார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள வைகோ, தமிழீழம், தமிழகத்தின் வாழ்வாதாரம், மாநில உரிமை என பல்வேறு விவகாரங்களிலும் தொடர்ந்து போர்குரல் உயர்த்தி வருபவர்.
நடைபயணம்
பதவி, பணம், இவைகளுக்கு அப்பாற்பட்டு கொள்கைக்காக வைகோவின் பின்னால் அணி வகுத்து நிற்பவர்கள் ஏராளம். தமிழக அரசியலில் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கிய வைகோ இப்போது 70 வயதை கடந்துவிட்டார். முன்பு போல் களப்பணியாற்ற அவர் உடல் ஒத்துழைப்பதில்லை. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அண்மையில் கூட தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிடக் கோரி நடைபயணம் மேற்கொண்டார்.
வேகமில்லை
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதற்கு பின்னர் மருத்துவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக பழைய வேகத்தை குறைத்துக்கொண்டார். இப்போது ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காக வழக்குகள் தொடர்ந்து அதனை நடத்தி வருகிறார்.
எதார்த்த நிலை
இதனிடையே சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், அதற்குள் கட்சிக்குள் வைகோவின் மகன் துரை வையாபுரியை அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை வைகோ மிகப்பெரிய தயக்கம் காட்டுவதோடு மகனை அரசியலுக்கு அழைக்க வேண்டாம் என தடுக்கவும் செய்கிறாராம். இருப்பினும், மதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் எதார்த்த நிலையை எடுத்துச்சொல்லி வைகோவுக்கு புரிய வைத்து வருகிறார்களாம்.