மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தை புத்துயிரூட்டும் திட்டம்... ஓய்வில் வைகோ... ஆய்வில் துரை வையாபுரி
சென்னை: மதிமுகவின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் பணிகளில் ஒரு அங்கமாக மாணவர் அணியை புத்துயிரூட்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அக்கட்சியின் தலைமை.
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் தங்கியிருக்கும் வைகோ, அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி அவர்களை உற்சாகமூட்டுகிறார்.
கடந்த ஆண்டு அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டதால் கட்சிப்பணி, அரசியல்பணிகளில் சற்று வேகத்தை குறைத்துக்கொண்டார்.
கொரோனாவை விட கொடியவன்.. ஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..கருணாவின் பேச்சால் கடும் சர்ச்சை
உட்கட்டமைப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. கொரோனா காரணமாக வீடுகளில் முடங்கி இருந்தாலும், தகவல் தொழில்நுட்ப வசதிகளின் உதவியோடு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர் தலைவர்கள். நிர்வாகிகள் சுணங்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் அவர்களுடன் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்துகின்றனர்.
மாணவர் அணி
அந்த வகையில் மதிமுகவின் அடிநாதமான மாணவர் அணியை புத்துயிரூட்டி கட்சியில் புதியவர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓய்வு தேவைப்படுவதால், இனி பழையபடி அவரால் அதிகமான சுற்றுப்பயணங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என கலந்துகொள்ள முடியாது. இதனால் அவருக்கு பதில் அவரது மகன் துரை வையாபுரியை கட்சிக்குள் கொண்டு வர மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள்.
துரை வையாபுரி
ஆனால், வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வரும் என்றும், அது சரியாக இருக்காது எனவும் வைகோ தொடக்கம் முதலே தயக்கம் காட்டி மகனின் அரசியல் வருகைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஆனால் காலத்தின் தேவை உணர்ந்து இனி மகனுக்கு வைகோ கிரீன் சிக்னல் கொடுத்துவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக துரை வையாபுரியும் கட்சியின் உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் யோசனையை மனதில் வைத்துள்ளாராம்.
புதுவரவு
கொரோனா பதற்றம் தணிந்தபின்னர் தமிழக அரசியலின் புதுவரவாக துரை வையாபுரி இருப்பார் என மதிமுக நிர்வாகிகள் சிலர் உறுதியாக தெரிவிக்கின்றனர். இதனிடையே இப்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருக்கும் வைகோ புத்தகங்கள் வாசித்து தனது நேரத்தை கழிப்பதோடு, மகனுக்கு ஒரு சில புத்தகங்களை படிக்க பரிந்துரைக்கிறாராம்.