புதுவை ஜிப்மரில் மத்திய பாஜக அரசால் இந்தித் திணிப்பு- நாளை மறுநாள் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: புதுச்சேரி ஜிப்மர் - ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி, ஆராய்ச்சி நிலையத்தில் மத்திய பாஜக அரசால் இந்தி திணிக்கப்படுவதைக் கண்டித்து நாளை மறுநாள் மே 10-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பாடும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ கடுமையாக எச்சரித்துள்ளார்.
பாத்ரூமில் வைத்து..6 மாதங்களாக சிதைக்கப்பட்ட 8 வயது சிறுமி! “அங்கேயே” மிதித்த பொதுமக்கள்! என்னா அடி!
இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: எப்பாடுபட்டேனும் தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஜிப்மர் இயக்குனர் ஒரு சுற்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

இந்தியை விரட்டியடிப்போம்
ஜிப்மர் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிர்காலத்தில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அவர் ஆணை பிறப்பித்து இருக்கின்றார். மருத்தவம் கற்பிப்பதற்குப் பதிலாக ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை இந்தி பள்ளிக்கூடம் ஆக்க முயற்சிக்கின்றார்.
எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் இந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.

மே 10-ல் ஆர்ப்பாட்டம்
அந்தச் சுற்று அறிக்கையை அவர் உடனே திரும்பப் பெற வேண்டும்; அந்த இயக்குனரை இந்தி பேசும் மாநிலத்திற்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற மே 10 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மர் நுழைவாயில் முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே. மணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்ற பாவேந்தர் வாழ்ந்த மண்ணில், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்று, எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்

ட்விட்டரில் கனிமொழி காட்டம்
முன்னதாக திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதில் கனிமொழி கூறியதாவது:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளில் இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்துவதை மாற்றி இனிமேல் முடிந்தவரை இந்தியை மட்டும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியைத் திணிக்கும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை.

ரவிக்குமார் எம்.பி.
இதேபோல் விசிக எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளில் இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்துவதை மாற்றி இனிமேல் முடிந்தவரை இந்தியை மட்டும் பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தியைத் திணிக்கும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.