தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
Recommended Video
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் இழுபறி நீடித்தது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மதிமுகவுக்கு, திமுக தலைமை அழைப்புவிடுத்தது.
இதை ஏற்று மதிமுக கட்சியின் தொகுதி பங்கீடு குழு உறுப்பினர்கள், இன்று திமுக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு இன்று காலை 11.15 மணியளவில் துவங்கி 12 மணிவரை நடைபெற்றது.
கணேசமூர்த்தி, மல்லை சத்யா உட்பட ஐந்து பேர் மதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவில், இடம் பெற்றிருந்தனர். இவர்கள் துரைமுருகன் தலைமையிலான திமுக குழுவினருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பொன்முடி, கே.என்.நேரு ஆகிய கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரும், திமுக சார்பில் பங்கேற்றனர்.
திமுக கூட்டணியில் மதிமுக 3 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. நேரடியாக வைகோவே ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட களமிறங்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், ஒரு தொகுதி மட்டும் வழங்க திமுக முன்வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. மீண்டும் கூடி பேச உள்ளோம் என கூட்டத்திற்கு பிறகு, கணேசமூர்த்தி தெரிவித்தார்.