மோடியை ஊடகங்கள்தான் மிகப்பெரிய தலைவராக சித்தரித்துவிட்டன.. பாஜகவை சரமாரியாக தாக்கிய யெச்சூரி!
சென்னை: மோடியை மிகப்பெரிய தலைவராக சித்தரித்ததில் ஊடகங்களுக்கு பங்கு உண்டு என சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
நரேந்திர மோடியை மிகப்பெரிய தலைவராக சித்தரித்தது ஊடகங்கள் தான் என அவர் குற்றம் சாட்டினார். ஒடுக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினர் பாதுகாப்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்றும் யெச்சூரி கூறினார்.
மேலும் அரசியல் சட்டத்தின் அடிப்படையை காப்பதுதான் முதல் இலக்கு என்றும் அவர் கூறினார். மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது தொடர்ந்து புகார்கள் வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகளையும் மத்திய பாஜக அரசு சிதைத்து விட்டது என்றும் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.