மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு...பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன்...மா.கம்யூ. கேள்வி
சென்னை: மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைத்த கதையாக பாமக ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். மருத்துவப்படிப்பு இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் என்று தமிழ்நாடு மா.கம்யூ. செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு இளநிலை படிப்பில் 15 சதமான இடங்களையும், முதுநிலை படிப்பில் 25 சதமான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என 1986 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில், அகில இந்திய தொகுப்பிற்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பின்னர், முதுநிலையில் 25 சதமான இடங்களில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உச்சநீதிமன்றம் இத்தொகுப்பில் இடஒதுக்கீடு கொள்கை அமலாக்க வேண்டும் என குறிப்பிடாமல் விட்டுவிட்டது.
2006ஆம் ஆண்டில் அபயநாத் என்பவர் தொடுத்த வழக்கில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அகில இந்திய தொகுப்பில் பட்டியல் இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் 15 மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
பாரி வள்ளலின் புகழ்கூறும் பிரான் மலை எனப்படும் பறம்பு மலையை பாதுகாக்க சீமான் வேண்டுகோள்
இதே போல் வேறுசில இடஒதுக்கீடுகளையும் மத்திய அரசு அமலாக்கி வருகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இதுவரை அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி சொல்லில் அடங்காது.
இந்நிலையில், அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் 1994-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பின் தங்கிய மக்களுக்கு 50 சதவீதம், பட்டியல் இன மக்களுக்கு 18 சதவீதம், பழங்குடி இனமக்களுக்கு 1 சதவீதம் ஆக மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் கோரப்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சிகளும் தமிழக அரசும் ஒத்தக் கருத்தோடு இந்த கோரிக்கையை முன் வைத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் 23 சதவீத இடங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்துள்ளது. இது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை சீர்குலைப்பதாக உள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்கையில் இடஒதுக்கீடு குறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள விதியின் படி அந்தந்த மாநிலங்களில் அமலில் இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையினை செயல்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி தமிழகத்தில் இருந்து அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டப்(1994) படியே இடஒதுக்கீடு அமலாகுவது மருத்துவ கவுன்சிலின் விதிப்படி கட்டாயம் ஆகும். இதன்படி பிசி, எஸ்சி, எஸ்டி முறையே 50, 18, 1, சதமான இடங்கள் கிடைத்திருக்க வேண்டும்.
இடஒதுக்கீடு சட்டப்படி பிற்பட்டோருக்கான 50 சதமான இடங்களை வழங்காமல் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இதனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் கிடைத்திருக்க வேண்டிய இடங்கள் பறிபோயுள்ளன. அதேபோல பட்டியல் இனமக்களுக்கு 18 சதமான இடம் வழங்குவதற்கு மாறாக 15 சதமான இடங்களை மட்டுமே வழங்கி வருகிறது.
மத்திய அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க முன் வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும். ஆனால், சமூகநீதி பேசும் பாட்டாளி மக்கள் கட்சி பிற்படுத்தபட்ட மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்கும் வகையில் நீதி மன்றத்தில் வாதாடுவது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் செயலாகும். பாமக தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தமிழ்நாடு மா.கம்யூ. செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.