நிஜமான மீ டூக்கள் வியாபிக்கும் வரை... ராஜலட்சுமியின் கதறல் கேட்டு கொண்டே இருக்கும்!
கிராமப்புறங்களிலும் மீ டூ வளரவும், பரவவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Recommended Video
சென்னை: நகர்ப்புறங்களையும் தாண்டி கிராமப்புறங்களையும் மீடூ எட்ட வேண்டும். சாதி, மத பாகுபாடின்றி அது போய்ச் சேரும்போதுதான் உண்மையான தீர்வுகளை பார்க்க வழி ஏற்படும்.
மீடூ அமைப்பில், ஆண்கள் மீது பெண்கள் பாலியல் புகார்களை அளித்தது போய் பெண்கள் மீது பெண்களும், ஆண்கள் மீது ஆண்களும் குற்றச்சாட்டுகளை வைக்க துவங்கி உள்ளனர்.
எல்லோருமே படித்தவர்கள்
இதில் ஒன்று உற்றுநோக்கினால், இதுவரை பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் அனைவருமே படித்தவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள், இன்னும் சொல்லப்போனால் அப்போது நிறைய பணம் சம்பாதித்துவிட்டு, கூடவே பேரும் புகழையும் வைத்து கொண்டிருப்பவர்கள்.
ராஜலட்சுமிக்கு தெரியாதே?
எப்போதோ அனுபவித்த பாலியல் துன்பங்களை கூற இப்போதுதான் தைரியம் தங்களுக்கு வந்தது என்று சொல்கிறார்கள் இவர்கள். இவர்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத, பின்தங்கிய கிராமப்புறத்தில் இருக்கும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? அதிலும் 13 வயது ஆத்தூர் சிறுமிக்கு மீ டூவை எப்படி புரிய வைத்திருப்பது? இன்னமும் கண்ணுக்கு தெரியாமல் நஞ்சுகளின் பாலியல் இன்னலில் சிக்கியுள்ள பிஞ்சுகளுக்கு மீ டூ கிடையாதா? அவர்களுக்கு போய் சேரவே சேராதா?
ஆர்வமா? அக்கறையா?
மீ டூ விவகாரம் தலைதூக்கியவுடன் ஒட்டுமொத்த தமிழகமும் சுறுசுறுப்பானது. மீ டூவை இப்படி உற்று நோக்க அடிப்படை காரணம் என்ன? யார் யாரை தவறாக பயன்படுத்தியது, யார் யாரை எங்கே சீண்டினார்கள், பாலியல் தொல்லையை எப்படியெல்லாம் அரங்கேற்றினார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமா? அல்லது அக்கறையா? இதே ஆர்வமும், அக்கறையும் சிறுமி ராஜலட்சுமி பாலியல் படுகொலையில் தமிழ் சமூகத்துக்கு இல்லாதது ஏனோ? வெறும் சீண்டல்களைதான் மீ டூ கவனிக்குமா? தலையை சீவி எடுத்து வீசி எறிந்தால் மீ டூ கவனிக்கப்படாதா?
அரியலூர் நந்தினி
இதுவரை மீ டூ புகார் அளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயர்குடியை சேர்ந்தவர்களே. இன்னும் எளிமையாக சொல்லப்போனால், தாழ்த்தப்பட்டவர்கள் இதுவரை மீ டூவுக்குள் நுழைந்ததில்லை. காரணம், பாலியல், சாதி, ரீதியான அறியாமையில் இன்னமும் மூழ்கி கிடப்பதுதான். இதே மீடு அன்று பட்டிதொட்டிகளுக்குப் பரவியிருந்தால் அரியலூர் நந்தினியை நாம் காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ தெரியவில்லை.
ஏன்னா என்னை வெட்டுறே?
மீ டூ என்பது நல்ல முறைதான், மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த அமைப்பு சாதி, மதம், இடம், நாடு, நகரம் தாண்டி, எல்லைகள் தாண்டி விரிவுபடுத்த வேண்டியது இன்றைய தினம் கட்டாயமாகிறது. சீண்டல்களை விட பிஞ்சுக்களின் பாலியல் வன்புணர்வுடன் கூடிய படுகொலை நிச்சயம் மீ டூவை விட பெரிதான ஒன்றே. இந்த உண்மை புரியும்வரை... நிஜமான மீ டூக்கள் வியாபிக்கும்வரை... "அண்ணா, நான் என்னண்ணா தப்பு செஞ்சேன், ஏன்னா என்னை வெட்டுறேன்னு" கேட்ட சிறுமி ராஜலட்சுமியின் கடைசி கதறல் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.