தீர்மானம் மட்டும் போதாது.. பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும்.. சட்டசபையில் ஸ்டாலின் கோரிக்கை
தமிழக அரசியல் கட்சிகள் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் பிரதமர் மோடியை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீவிரமாக செயல்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தியது. இதில் மேகதாதுவிற்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேகதாது அணை தொடர்பான தமிழக தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தினகரன், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
முதல்வர் பேச்சை தொடர்ந்து மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
அதில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் செயல்படாமல், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. காவிரி ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டதன் உள்நோக்கம் என்ன?.மாநிலத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது.
தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.
தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். பிரதமரை சந்திக்க முதல்வர் அழைத்தால் திமுக அதில் கலந்து கொள்ள தயார். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக கஜா புயல் நிவாரணம் தொடர்பாக பேச ஸ்டாலின் முயன்றார். ஆனால் கஜா புயல் பற்றி பேச தொடங்கிய ஸ்டாலினை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடைமறித்து, மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றார்.