அம்மாவும் நீயே.. இரும்பு மனுஷியும் நீயே.. மறக்க முடியாத ஜெயலலிதா
சென்னை: அம்மா என்று அனைத்துத் தமிழ் மக்களாலும் அன்போடு அழைக்கப்படுபவர். ஆறரைக் கோடி மக்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டவர். புரட்சித்தலைவி இரும்பு மனுஷி என மக்களால் அழைக்கப்படுபவர். ஐந்து முறைத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். ஜெ. ஜெயலலிதா என்னும் நான் என்ற குரலுக்குச் சொந்தக்காரர் நம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்.
செல்வி ஜெயலலிதா அவர்கள் பிப்ரவரி மாதம் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியாவில் மேலக்கோட்டை என்ற இடத்தில் ஜெயராம் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜெயலலிதா அம்மையார். இவருடைய இயற்பெயர் கோமளவல்லி. ஆனால் அவருக்கு ஒரு வயது ஆன போது ஜெயலலிதா எனப் பெயரிட்டனர். சிறுவயதுப் பள்ளிப்படிப்பை கர்நாடகாவிலேயே படித்தார். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.
ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு 'கலைச்செல்வி' என்ற பட்டத்தை அளித்தார்கள். இவர் எம்.ஜி.ஆர் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
1981ல் அ.தி.மு.க வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினராகி தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தன் கன்னி பேச்சுகளால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியே கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா அமர்ந்திருந்த இருக்கை அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் இறந்த போது சோகமே உருவாக அவர் பக்கத்திலேயே நின்றிருந்தார். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது அவருடைய வாகனத்தில் இருந்து இறக்கிவிடப் பட்டார். எம்.ஜி.ஆர் இறந்தவுடன் கட்சி இரண்டாகப் பிளவுப் பட்டது. ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணி என்று. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போதே இறந்துப்போனதால் அந்தப் பதவி ஜானகி அம்மையாருக்குக் கிடைத்தது. உண்மையான அதிமுக எது என்று எல்லோரும் குழம்பிய வேளையில் அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா அணி வெற்றிப் பெற்றது. பிளவுப்பட்ட அதிமுக இந்த வெற்றியால் ஒன்று சேர்ந்தது. 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
தங்கத்தாரகை என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் ஜெயலலிதா. மக்கள் எல்லோரும் அவரை அம்மா என்றே அழைத்தனர். ஜெயலலிதாவிற்கு எவ்வளவுப் பதவி வந்தாலும் அவருடைய வாழ்வில் தனிமை மட்டும் போகவில்லை. சசிகலாவை சிறிது காலத்திற்க்குப் பிறகு மிகவும் நம்பினார். எந்த பதவியாக இருந்தாலும் எந்த விஷயமாக இருந்தாலும் சசிகலாவிற்குப் பிறகு தான் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் செல்லும். அப்படி சசிகலா தனது கட்டுப்பாட்டிலேயே ஜெயலலிதாவை வைத்திருந்தார் என்றே கூற வேண்டும்.
என்று சொத்துக்குவிப்பு வழக்கு அவர் மீது போடப்பட்டதோ அன்று முதல் ஜெயலலிதா அவர்கள் எந்த நகையும் அணிவதில்லை. தனியொரு மனுஷியாக நின்று அதிமுக கட்சியை மிகப்பெரிய மாநிலக் கட்சியாக உருவாக்கியவர். மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்ற பாடல் வரிகளுக்கேற்ப ஒரு பெண்ணாக இத்தனை ஆண்களுக்கு மத்தியில் தனக்கு வந்த தடைக்கற்களயெல்லாம் படிக்கற்களாக மாற்றியவர். பெண்களுக்காக தாலிக்குத் தங்கம் பிரசவத்திற்கான மருத்துவத் திட்டம் மற்றும் பெண்களுக்காக ஸ்கூட்டி வழங்குதல் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தார்.
அவர் பத்திரிகையாளர் சோவைத் தன் நண்பராகக் கொண்டிருந்தார். சோ விற்கு உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனைக்குச் சென்றுப் பார்த்தார். அவரிடம் அடிக்கடி ஜெயலலிதா அரசியல் விஷயங்களை விவாதிப்பார். சோ அவர்கள் ஜெயலலிதாவிற்குச் சிறந்த அரசியல் ஆலோசகராகத் திகழ்ந்தவர்.
ஜெயலலிதாவிற்கு என்று அரசியலில் தனி ஸ்டைல் உண்டு. தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி வாகைச் சூடலாம் என கணித்து வைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தயார் செய்து விடுவார். தேர்தல் அறிவித்தவுடன் அதிரடியாக முதன்முதலில் கூட்டணிக் கட்சிகளையும் வேட்பாளரையும் அறிவித்து விடுவார். அவருடைய அரசியல் சாகசங்களைக் கண்டு வியக்காதவர் இவ்வுலகில் இல்லை.
தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலைத் திட்டம் மீத்தேன் திட்டம் நீட் நுழைவுத்தேர்வு போன்ற திட்டங்களில் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். ஏழை எளியோருக்காக குறைந்த விலையில் உணவு வழங்கிட அம்மா உணவகத்தை உருவாக்கினார். அம்மா குடிநீர் பாட்டில் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தவறென்று தெரிந்தால் அவர் யாரென்றும் பாராமல் சுட்டிக் காட்டிவிடுவார். தவறு செய்கிறாரென்று அம்மாவுக்குத் தெரிந்தால் அவரை அழைத்துக் கண்டித்து விடுவார். காலையில் தினமும் குளித்து பூஜை செய்த பின்னரே படைகள் சூழத் தலைமைச் செயலகத்துக்குக் கிளம்புவார்.கோட்டூர்புரம் வரசத்தி விநாயகர் கோவிலில் தினமும் சாமி கும்பிட்டுவிட்டுத் தான் செல்வார். தலைமைச் செயலகத்தின் வாசலில் இருக்கும் நாகாத்தம்மன் கோயிலிலும் காரில் இருந்தபடியே வணங்கிச் செல்வார். இரக்க குணம் கொண்டவர். இலவசமாக மிக்ஸி கிரைண்டர் மற்றும் பேன் போன்றவற்றைத் தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
சர்க்கரை நோயால் தன் இறுதிக் காலத்தில் மிகவும் அவதிப்பட்டார்.2016செப்டம்பர் 23 ஆம் தேதி நோயால் அவதிப்பட்டு அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். தொண்ணூறு நாட்கள் சிகிச்சையளித்தும் சிகிச்சைப் பலனின்றி 2016 டிசம்பர் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். ஜெ. ஜெயலலிதா எனும் நான் என்ற கம்பீர குரலால் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.
சிறந்த பேச்சாளர் திரைப்பட நடிகை அரசியல் கட்சித் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். இரவு பன்னிரெண்டு மணியானாலும் அரசு அலுவல்களை முடித்தப் பின்னரே உறக்கம்.மக்களுக்காக அயராது உழைத்தவர். போராட்டக் குணம் உடையவர். முயன்றால் எதிலும் வெற்றிப் பெறலாம் என ஜெயித்துக் காட்டியவர். பிடிவாதக் குணம் கொண்டவர். சாதிக்கும் வெறி உண்டு அவரிடம். அவர் தூங்கும் முன் அவருடையப் பணியாளர் அனைவரும் சாப்பிட்டார்களா எனக் கேட்டுவிட்டுத் தான் உறங்கச் செல்வார். தனியொருத்தியாக நின்று தன் வாழ்நாளிலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் சாதனைப் படைத்தவர் நமது ஜெயலலிதா அம்மா அவர்கள்.
- ஜி. உமா