Newsmakers 2018: பீல்ட் அவுட் ஆனாலும் பரபரப்பாக பேசப்பட்ட விஜயகாந்த்
இந்த வருடம் மறக்க முடியாத தலைவர்களில் மிக முக்கியமானவர் விஜயகாந்த்
சென்னை: சினிமாவில் நுழைந்தும், அரசியலில் கால் பதித்தும் எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டாலும் இந்த வருடம் அதிகமாக பேசப்பட்டவர் விஜயகாந்த்தான்! இத்தனைக்கும் அவர் இப்போது சினிமாவிலும் இல்லை, அரசியலிலும் இல்லை!!
ரஜினியே அரசியலுக்கு வர தயங்கிய காலகட்டத்தில், புயலென நுழைந்தவர் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்தபோதும், தேர்தலில் தனித்து நின்ற போதும் பல தரப்பினராலும் கடும் விமர்சனம் செய்யப்பட்டார்.
ஆனால் 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்து, கடைசியில் கூட்டணி குழப்பத்தால் இன்று வாழ்ந்து கெட்ட கட்சி என்ற பெயரை சம்பாதித்து வைத்துள்ளார்.
வேட்டையாடப்பட்டார்
கட்சி வீழ்வதற்கு, மனைவி, மைத்துனர் என்ற காரணங்கள் ஒரு பக்கம் சொல்லப்பட்டு வந்தாலும், தமிழக அரசியலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக அரசியல் களமிறங்குபவர்களை திராவிட கட்சிகள் சூழ்ச்சி செய்து எப்படி வேட்டையாடுகிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜயகாந்த்தான்.
இனம் புரியாத உணர்வு
அன்றைய விஜயகாந்த், நேரில் சந்தித்து உதவி கேட்ட ஆயிரக்கணக்கானோருக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். ஏராளமானோர் விஜயகாந்த் கட்டி கொடுத்த இலவச மருத்துவமனையில் உயிர்பிழைத்து இன்று ஆரோக்கியத்துடன் நடமாடி வருகிறார்கள். பல உயிர்களை பிழைக்க விஜயகாந்த், இன்றைக்கு உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். தள்ளாமையில் இருக்கும் விஜயகாந்த்தை பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நெஞ்சை அடைத்துவிட்டு செல்கிறது.
குலுங்கி அழுதார்
கருணாநிதி மறைந்தபோது விஜயகாந்த் ஒரு குழந்தை போல அழுது வெளியிட்டதையும், அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியபோது, வீட்டிற்கு கூட போகாமல், நேராக கருணாநிதி சமாதிக்கு வந்த தள்ளாமை நடையையும், துக்கம் அடைத்து தொண்டை வெடித்து அழுத விஜயகாந்த்தை கண்டு மனம் கலங்காதவர்கள் யார்? விஜயகாந்த் அழும்போதெல்லாம் நமக்கும் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்து விட்டு சென்றது.
ஆதங்கம்
ஆனால் கடந்த வாரம் வரை மக்கள் நலக்கூட்டணிக்கு அழைக்க எத்தனை முறை நடையாய் நடந்தவர்கள், விஜயகாந்த்தை போய்ப் பார்க்காததும், விசாரிக்காததும் மனிதாபிமானமற்ற அரசியலின் உச்சம். அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும் விஜயகாந்த்தை கண்டுகொள்ளவில்லையே என்று அவரது குடும்பத்தினரும் ஆதங்கப்பட்டார்கள்.
எதிர்மறை உணர்வு
யார் மறந்தாலும் சரி, விஜயகாந்த் மீது தமிழக மக்களுக்கு என்றுமே பாச உணர்வு சற்று ஜாஸ்தியாகவே உள்ளது. மற்ற கட்சிக்காரர்கள் மீது காட்டும் விரோதம், பகை, எரிச்சல், குரோதம், வன்மம், ஆத்திரம் இது எதுவுமே விஜயகாந்த் மீது தமிழக மக்களுக்கு காட்ட மனசு வருவதில்லை. இதுபோன்ற எந்த எதிர்மறை உணர்வும் விஜயகாந்த் மீது வந்ததும் கிடையாது. அதற்கு காரணம் விஜயகாந்த்தின் வெள்ளை மனசு.
சொந்த பணம்
ஒரு கட்சி அடியோடு காணாமல் போய் கொண்டிருந்தாலும் அந்த கட்சி தலைவர் மீது அலாதி பிரியமும், பரிவும், பாசமும், அன்பும், இனம்புரியாத உற்சாகமும் வருகிறது என்றால் அது ஈரமனசு உடைய விஜயகாந்த் மீது மட்டும்தான். ஆனால் பல கோடிகளை குவித்து சில கோடிகளை மக்களுக்கு செலவு செய்த தலைவர்களுக்கு மத்தியில், தனது சொந்த காசில் மக்களுக்கு உதவி செய்தவர் இதுவரை நம்பி மோசம் போனதாக வரலாறு கிடையாது. விஜயகாந்த்தும் அப்படித்தான்.
2018-ம் வருடம் முழுவதும் விஜயகாந்த் பொதுமக்களிடையே வரவில்லை, பேசவும் இல்லை, சந்திக்கவும் இல்லை என்றாலும், தொடர்ந்து நம்மிடையே பேசப்பட்டே வந்துள்ளார் என்றால் அவர் செய்த ஈகையே அதற்கு காரணம்!!
{document1}