ஆண்களும் கோலப்பொடியுடன் களமிறங்கினர்.. மாறிப்போன தமிழக போராட்ட களம்
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய மக்கள், இப்போது வித்தியாசமான ஒரு போராட்ட அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.
போராட்ட விவகாரங்களில் விதவிதமான யுத்திகளை யோசித்து கையாளக்கூடியவர்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நாடே இதைப் பார்த்து வியந்தது.
இப்போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் கையில் எடுத்துள்ள ஒரு வித்தியாசமான போராட்ட வடிவம் கோலம் இடுதல்.
கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள் என்று எழுதுவதைப் போல, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றெல்லாம் எழுதி தேசிய அளவில் உள்ள ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர், போராட்டக்காரர்கள். எனவேதான், காவல்துறையினர் இதுபோன்ற கோலங்களுக்கு தடை விதித்து தடுத்து வருவதை பார்க்க முடிகிறது.
இது சாத்வீகமான ஒரு எதிர்ப்பு முறை என்பதால், போராட்டத்தில் இறங்கியுள்ள, அனைத்து மக்களும் 'கோலம்போட' தொடங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடக்கூடிய அனைத்து பிரிவினரும் இதை ஒரு ஆயுதமாக கையாண்டு வருகின்றனர். தங்கள் குடும்பத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளைக் கூட கோலம் போட வைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வைத்து அதைப் புகைப்படமாக சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
டெல்லி விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்- 530 விமானங்கள் தாமதம்!
இதே போன்று இஸ்லாமிய ஆண்கள் தங்கள் எதிர்ப்பையும் கோலம் மூலம் வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. பொதுவாக கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கோலமிடுவது வழக்கம் கிடையாது. இருப்பினும் தங்கள் போராட்டத்தை வெளிக்காட்டுவதற்காக கோலம் என்ற புதிய இந்த யுத்தியை கையில் எடுத்துள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.