நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் - ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நீலகிரியில் கடந்த நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கேரளா, கர்நாடகாவிலும் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருகியுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. கேரளாவில் வயநாடு, இடுக்கி, மலப்புரா மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரைக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 36 செமீ, அவலாஞ்சி கூடலூர், பஜார் பகுதிகளில் 35 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் சராசரியாக 30 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
கன மழை நீடிக்கும்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் காணும் இடமெங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதீத கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலெர்ட் எச்சரிக்கை
அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, தேனி மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிதீவிர கனமழை பெய்யும். தமிழக கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எங்கெங்கு மழை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கனமழை பெய்யும் எனவும்,சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சேலம், திருப்பூர், திருச்சி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், 48 மணிநேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை உயரும்
ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரைக்கும் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் யாரும் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடலில் 4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.