வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... திருப்பதியில் வெளுத்து வாங்கிய கனமழை
Recommended Video
சென்னை: வருகிற 30 ஆம் தேதியன்று, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஜூலை 1 முதல் 3 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும், அடுத்த இரண்டு நாட்களில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வேப்பூரில், 6 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடும் வறட்சி காரணமாக திருப்பதியில் உள்ள அணைகள் வறண்டுவிட்டது. இதனால் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் தேவஸ்தானம் அதிகாரிகள் திணறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் கொட்டி தீர்த்தது.
இந்த மழையினால் லட்டு பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களுக்காக நந்தகம் அருகே கட்டப்பட்டுள்ள வகுலமாதா ஓய்வறைக்குள் மழைநீர் புகுந்தது. திருப்பதியில் விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் குளிர்காற்று வீசி வருகிறது.