காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதையை கணித்த வானிலை மையம் - எங்கே கரையை கடக்கும்
காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதையை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா அல்லது புயலாக மாறுமா என்பது சில நாட்களில் தெரிய வரும்.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. நாளை மறுநாள் 23ஆம் தேதி முதல் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை கணிப்புக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாகவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. 23ஆம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த மண்டலமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கனமழை
அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த மண்டலம் மத்திய மேற்கு பகுதியை நோக்கி நகரும். தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அரபிக்கடல் வங்கக் கடல்
ஒரே சமயத்தில் அரபிக் கடலிலும் வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதனுடைய பாதை எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதை
மூன்று பாதைகள் கணிக்கப்பட்டுள்ளன. ஒரு பாதை தென் தமிழகம் இலங்கையை நோக்கி நகர்ந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து வட தமிழகத்தை கடந்து செல்வதாக காட்டுகிறது. மற்றொரு பாதை ஒடிசா வடக்கு பகுதியை கடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் இடம்
தற்போது வரை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும் என சரியான கணிப்பு தெரிவிக்கப்படவில்லை. அடுத்து வர கூடிய நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் போது அதனுடைய நகர்வு எப்படி இருக்கும், எந்த இடத்தில் கரையை கடக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா அல்லது புயலாக மாறுமா என்பது சில நாட்களில் தெரியவரும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.