தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல மழை இருக்கு.. ஆனால்.. எச்சரிக்கும் வானிலை மையம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் பகல் நேர வெப்பநிலை 6 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலம் காரணமாக ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4- ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பு இருந்தே தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் அனல் காற்று வீசத்தொடங்கியது. அதேநேரம் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது சில இடங்களில் மழையும் பெய்து வந்தது.
இன்று தலைநகர் சென்னையின் 105 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. இதே போல வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட்டாகவும், திருவண்ணாமலையில் 103 டிகிரி பாரன்ஹீட்டாகவும், சேலத்தில் 84 டிகிரி பாரன்ஹீட்டாகவும், திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்தது.
இதனிடையே தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. . இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தியில். "வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் பகல் நேர வெப்பநிலை 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.