குடையை விடுங்க.. குடத்தை எடுங்க.. கொண்டாடுங்க.. மழை வரப்போகுதாம்..!
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என கூறப்படுகிறது
சென்னை: ஒரு நல்ல விஷயம்.. அடுத்த 48 மணி நேரத்துல மழை வரப்போகுதாம்.. அதுவும் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் சென்னையும் அடக்கம் என்பதுதான் கூடுதல் ஸ்பெஷல் நியூஸ்!
2 நாளைக்கு முன்னாடி சென்னையில் மழை பெய்ததை மக்கள் ரசித்து கொண்டாடினார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மழையை கண்ணீரால் வரவேற்றனர்.
கொஞ்சம் நேரமே பெய்தாலும் எல்லாரையுமே பேசவைத்து சென்றுவிட்டது அந்த மழை. அதற்கு பிறகு மழை இல்லை என்றாலும், எப்படியும் இந்த வாரம் மழை வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் சொல்லி இருந்தார்.
அதன்படியே அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு செய்தி குறிப்பில் இந்த தகவலை மையம் தெரிவித்துள்ளது. அதில்,"தமிழகத்தின் வங்க கடலை ஒட்டிய வளி மண்டலத்தில் வெப்பச்சலனம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணா மலை, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருக்கிற தண்ணி பஞ்சத்துல மழை வர்றதே பெரிய விஷயம்.. இந்த 15 மாவட்ட மக்களுக்கும் வர்ற மழையை குடத்தை எடுத்து, சிந்தாம சிதறாம பிடிச்சு வெச்சுக்க வேண்டியதுதான்!