விஜயகாந்த் கல்யாண மண்டபத்துக்கு மீண்டும் சிக்கல்.. மொத்த இடத்தையும் மெட்ரோ ரயில் கேட்கிறதாம்!
விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை இடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: விஜயகாந்த் கல்யாண மண்டபத்தில் திரும்பவும் "கை" வைக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன.
கோயம்பேடு பஸ் ஸ்டேண்டுக்கு அருகே விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்-அழகர் திருமண மண்டபம் உள்ளது. ஆனால் எப்பவுமே கோயம்பேட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு கொண்டே இருந்தது.
அதனால் பஸ் நிலையப் பகுதியில் நெரிசலை தவிர்க்க ஒரு அடுக்கு மாடி மேம்பாலம் கட்ட அப்போதைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு விஜயகாந்த்தின் திருமண மண்டபம் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கவே மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்க வேண்டி வந்தது.
மாற்று பிளான்
மண்டபத்தின் மீது கை வைக்க கூடாது என்று அப்போதிருந்தே விஜயகாந்த் தனது எதிர்ப்பை சொல்லிக் கொண்டே வந்தார். ஆனாலும் திமுக கேட்கவே இல்லை. அதனால் நேரடியாக போய் கருணாநிதியை சந்தித்து மண்டபத்தை இடிக்க வேண்டாம் என்று சொல்லி, வேறு ஒரு மாற்று பிளானையும் தந்தார். அதை என்ஜினியர்களால் செயல்படுத்த முடியவில்லை.
மோதல் போக்கு
மண்டபத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது. மண்டபம் இடிந்தபோதே திமுக மீது தான் வைத்திருந்த அத்தனை நம்பிக்கையும் விஜயகாந்துக்கு இடிந்து விழுந்தது. கல்யாண மண்டபத்தை வேண்டுமென்றே இடிகிறார்கள் என்று சொன்னார் விஜயகாந்த். இதனை மனதில் வைத்தே, திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ததுடன், அதிமுகவுடன் கூட்டு வைக்கும் அளவுக்கு ஒரு மோதல் போக்கை கடைப்பிடித்தே வந்தார்.
விரிவாக்கம்
இந்த திருமண மண்டபம் தற்போது மீண்டும் இடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மெட்ரோ ரயில் நிர்வாக பணி தற்போது கோயம்பேட்டில் நடந்து வருகிறது. அதற்காக கோயம்பேட்டிலிருந்து மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கம் செய்ய முனைந்தால், இடையூறாக உள்ள கடைகள், வீடுகள் நிலங்கள் என அனைத்தையும் கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கையகப்படுத்தப்படும்
அப்படி பொதுமக்களின் இடத்தை கையகப்படுத்தி விட்டாலும் அதற்கான இழப்பீட்டை தரவும் அரசு முடிவு செய்துள்ளது. இப்படி கையகப்படுத்தும் நிலங்களில் விஜயகாந்தின் மண்டபமும் அடிபடுகிறது. இன்னும் சரியாக சொல்வதானால், மண்டபம் இருக்கும் இடத்தில்தான் மெட்ரோ ரயிலின் வேலையே நடக்க போகிறது.
பறிபோகுமா?
திமுக காலத்திலாவது மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதற்கே விஜயகாந்த் கோபம் கொண்டு, கடைசிவரை கருணாநிதியுடன் ஒன்று சேர முடியாமல் போய்விட்டது. இப்போது மொத்த மண்டபமும் பறிபோகும் என கூறப்படுகிறது.
மனசு ஒடிந்தார்
இப்போது விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லை. வெளிநாடு கிளம்பி போய் இருக்கிறார். ஆனால் மண்டபம் இடிக்கப்படும் விஷயத்தை அவரிடம் சொன்னபோது ரொம்பவும் மனசு ஒடிஞ்சு போய்ட்டாராம். அன்றைக்கு விஜயகாந்த்திடம் இருந்த வேகமும், சுறுசுறுப்பும் இன்று இல்லை என்றாலும், இதை எப்படி எதிர்கொள்ள போகிறார் என தெரியவில்லை. ஏனெனில் இந்த கல்யாண மண்டபம் தேமுதிகவுக்கு இப்போது வரை ஒரு அடையாளமாகவே உள்ளது.
தொண்டர்கள் விருப்பம்
வெளிநாட்டுக்கு இன்றுதான் விஜயகாந்த் கிளம்பி சென்றுள்ளார். சிகிச்சை முடிந்து அவர் எப்போது திரும்பி வருவார் என தெரியவில்லை. வந்தபிறகு மண்டபத்தை இடிக்காமல் காக்க ஏதாவது முடிவு செய்வாரா? அல்லது கட்சியை போல மண்டபத்தையும் இழக்க விட்டுவிடுவாரா என்று தெரியவில்லை. எப்படியாயினும், விஜயகாந்த் உடல்நலம் தேறி, பழைய துடிப்புடன் திரும்பி வந்து மண்டபத்தையும் காக்க வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.