வேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் !
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துவிட்டனர்
சென்னை: "என்னை தனித்து போட்டியிடும்படி தொண்டர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.. அதனால்தான் போட்டியிட உள்ளேன்" என்று துணிச்சலாக அறிவித்தவர் ஜெ. தீபா! ஆனால் இன்று அந்த பேரவையில் உள்ளவர்கள் கூண்டோடு விலகி அதிமுக பக்கம் போய்விட்டனர்!
ஜெ. இறந்தவுடன், அந்த அனுதாபத்தில் வெற்றி பெற்றுவிடலாம், அரசியலில் தாக்கு பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டவரில் தீபாவும் ஒருவர்.
கட்சியை ஆரம்பித்தார்.. கணவனுடன் சண்டை.. பிரிந்தார்கள்.- திரும்பவும் சேர்ந்தார்கள்.. இப்படித்தான் அந்த பேரவை மக்களின் மனதில் பதிந்து விட்டதே தவிர, வேறு எந்த ஒரு செயல்பாட்டையும் முன்னெடுக்கவில்லை என்பது நிரூபணமாகி வருகிறது.
கோரிக்கை
போராட்டம், மறியல், கோரிக்கை, வேண்டுகோள் உட்பட மக்களுடன் நெருங்கி பழகாததே இன்றைய தீபா பேரவையின் சறுக்கலுக்கு காரணம்.
ஊழலற்ற தலைமை
ஜெ.வுக்கு மாற்றாக இவர் இருப்பார் என்று, கிராமப்புற பகுதிகளில் நம்பப்படுவதாக சொல்லப்பட்டது. ஜெயலலிதாவின் வாரிசு என்கிற அன்பு, தீபா மீது இன்னமும் உள்ளதாகவும், ஊழலற்ற ஒரு தலைமையை தீபாவால் தான் கொடுக்க முடியும்' என்று அவர்கள் நம்புவதாகவும்கூட சொல்லப்பட்டது.
ஓட்டை பிரிப்பார்
இரட்டை இலைக்கு விழும் வாக்கினை தீபாவால் பிரிக்க முடியும் என்றும், வட மாவட்டங்களில், பாமக-வுக்கு எதிராகத் தீபா பிரசாரம் மேற்கொண்டால், பாமக நிற்கும் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க இரட்டை இலை வாக்குகளை தீபாவால் பிரிக்க முடியும் என்றும்கூட கணக்கு போடப்பட்டது. ஆனால் எல்லாமே தப்பு தப்பு கணக்காய் போய்விட்டது.
விசுவாசம்
தமிழக மக்கள் சொல்ல முடியாத பல பிரச்சனைகளில் தவித்து வருகிறார்கள். இவர் தேர்தல் சமயத்திலும், தேர்தலுக்கு பின்பும் இதுவரை தீபா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஜெ. மீது உள்ள பாசம், அன்பினால், தீபாவை நம்பி பலர் இந்த பேரவையில் இணைந்தனர். ஆனால் இப்போது ஜெ.மீதுள்ள விசுவாசத்தால் வேறு கட்சிக்கும் போய் சேர முடியாது என்பதால்தான், நம்பி ஏமாந்தவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்.
கரையும் பேரவை
திருச்சி மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் மீன்கடை சுலைமான், மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் தில்சாத் பேகம், பாலக்கரை பகுதி செயலாளர் அமலா பாபுராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். பேரவை கரைய ஆரம்பித்துவிட்டது.. இப்படியே போனால் அப்படி ஒரு கட்சி எங்கே என்று அதனை தேட வேண்டி இருக்கும் என்ற சூழல் தீபாவுக்கு வந்துள்ளது!