சட்டசபை தேர்தலில் களமிறங்கும் எம்ஜிஆர் பேரன் ... கடைசி வரை அதிமுகவில் இருப்பேன் என உருக்கம்
சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள எம்ஜிஆர் பேரன் ஜூனியர் ராமச்சந்திரன், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு நான் இருப்பேன் என்றும் கடைசி வரை அதிமுகவில் ஒரு தொண்டனாகவே நிலை நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்களை இறுதி செய்வது போன்ற பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்திலிருந்து இன்று 50க்கும் மேற்பட்டோர் சூழ, எம்ஜிஆரின் பேரன் ஜூனியர் எம்.ஜி.ஆர் ராமச்சந்திரன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த அவர், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் எம்.ஜி.ஆர்.ராமச்சந்திரன், "ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை அளித்துள்ளேன். இந்த மூன்று தொகுதிகளிலும் நான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஒருபோதும் தனித்து நிற்க மாட்டேன், அதிமுக தலைமை நிச்சயமாக எனக்கு வாய்ப்பு அளிக்கும்.
சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அனைத்து அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தனர். ஆனாலும் இரட்டை இலை எங்கு இருக்கிறதோ, அங்கு நான் இருப்பேன், கடைசி வரை அதிமுகவில் ஒரு தொண்டனாகவே நிலை நிற்பேன்" என்று பேசினார்.