சார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு "பெரும் போராட்டம்.." அறிவிச்சது யாருன்னு பாருங்க!
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில், முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர், தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறி இயக்குனர் பா .ரஞ்சித் வீட்டு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக ஒரு கட்சி அறிவித்துள்ளது.
Recommended Video
அந்தக் கட்சியின் பெயர் எம்ஜிஆர் மக்கள் கட்சி. இந்த கட்சியின் தலைவராக இருப்பவர் விஸ்வநாதன். வெறும் விஸ்வநாதன் கிடையாது .. எப்போதுமே தனது பெயரை எம்ஜிஆர் விஸ்வநாதன் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய விஸ்வநாதன்.
இவர்தான் தொண்டர்களையும் ரசிகர்களையும் மக்களையும் திரட்டி பா ரஞ்சித் வீட்டு முன்பாக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை பர்வதம்மாவுக்கும் இடியாப்ப பரம்பரை தனலட்சுமிக்கு சண்டை.. அன்றே சொன்ன நாகேஷ்!
சார்பட்டா பரம்பரை திரைப்படம்
பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம். இதில், ஆர்யா, பசுபதி , ஜி.எம்.சுந்தர், திஷாரா, கலையரசன், சபீர், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1970களில், சென்னையில் குத்துச்சண்டை பரம்பரைகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை இந்த திரைப்படத்தில் காட்சிகளாக வைத்து இருப்பதோடு, எமர்ஜென்சி காலம் உள்ளிட்ட விவகாரங்களை கூறியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.
திமுகவை புகழும் காட்சிகள்
இதில் பசுபதி கதாபாத்திரம் திமுககாரராக வருவதால் அவ்வப்போது திமுக பற்றியும் அதன் தலைவர் கருணாநிதி பற்றியும் பெருமையாக பேசுவது போல வசனங்கள் உள்ளன. அதேநேரம், இந்திராகாந்திக்கு எம்ஜிஆர் ஆதரவாக இருந்தது போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட காட்சி படத்தில் இருக்கிறது. எம்ஜிஆர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை, முட்டி போட வைத்து கதாநாயகன் மற்றும் அவரது நண்பன் கேலி செய்வது போன்ற காட்சி இருக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான், சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆர் சரியான முறையில் காட்டப்படவில்லை, உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளார் என்று அதிமுகவின் முன்னாள் சீனியர் அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதேபோல முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதும் தேவையில்லாமல் படத்தில் அரசியல் சாயம் கலக்கப்பட்டிருக்கிறது, எம்ஜிஆர் உண்மைக்குப் புறம்பாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
பா.ரஞ்சித் வீட்டு முன்பாக போராட்டம்
இன்னொரு பக்கம்.. இயக்குநர் ரஞ்சித் வீட்டு முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். பின்னர், அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எந்த ஒரு கட்சிக்காரராக இருந்தாலும் சரி, எம்ஜிஆரை விமர்சனம் செய்தது கிடையாது. அந்த அளவுக்கு ஏழை மக்களுக்கு திரைப்படங்களிலும் சரி ஆட்சிக்கு வந்த பிறகும் சரி பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். ஆனால் ரஞ்சித்துக்கு அடியும் தெரியவில்லை நுனியும் தெரியவில்லை.
எம்ஜிஆர், முகமது அலி நட்பு
எம்ஜிஆருக்கு பாக்சிங் தெரியாது என்பது போல ரஞ்சித் படத்தில் காட்டியுள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் சென்னை வந்தார். அவரை தனது வீட்டுக்கு கூட்டி சென்று விருந்து கொடுத்தவர் எம்ஜிஆர். முகமது அலியாலேயே பாராட்டப்பட்டவர் தான் எம்ஜிஆர் . தமிழ்நாடு இளைஞர்களுக்கு உடற்பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியது எம்ஜிஆர்.
ரஞ்சித்துக்கு தகுதியில்லை
இந்த அடிப்படை விஷயமே இயக்குனர் ரஞ்சித்துக்கு தெரியவில்லை. இது புரியாமல் திரைப்படத்துறையில் என்ன செய்யப்போகிறார்.. சமுதாயத்திற்கு இவர் என்ன செய்யப்போகிறார்? யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் எம்ஜிஆரை விமர்சனம் செய்யும் தகுதி ரஞ்சித்துக்கு கிடையாது. எனவே ரஞ்சித்துக்கு எம்ஜிஆர் மக்கள் கட்சி தனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறது.
போராட்டம்
இன்னும் 48 மணி நேரத்திற்குள் பா.ரஞ்சித் இந்த விவகாரம் தொடர்பாக பொது மன்னிப்பு கேட்காவிட்டால் 29ஆம் தேதி ரஞ்சித் வீட்டு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். எது வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு எம்ஜிஆர் மக்கள் கட்சி தயாராக இருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எம்ஜிஆர் ரசிகர்கள், எம்ஜிஆர் பக்தர்கள் தீவிரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.