எம்ஜிஆர் நிறமே காவிதான்... எம்ஜிஆருக்கு கோவிலே இருக்கே...அர்ஜூன் சம்பத் அடடே விளக்கம்
எம்ஜிஆருக்கு கோவில் கட்டி காவித்துண்டு கட்டி கும்பிடுகிறார்களே என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போட்டு கலகத்தை ஏற்படுத்தினர் சிலர். அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டனர். அமைச்சர்களே அதிருப்தியை வெளிப்படுத்தினர், ஆனால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தோ, எம்ஜிஆர் நிறமே காவிதானே என்று கேட்டிருக்கிறார். எம்ஜிஆர் கோவிலில் அவருக்கு காவி வேஷ்டி கட்டி வழிபடுகிறார்களே என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தலைவர்கள் சிலை மீது காவி சாயம் பூசி கைதாவது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அப்படித்தான் புதுச்சேரி வில்லியனூரில் எம்ஜிஆர் சிலை மீது மர்மநபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்திருந்தனர். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக தொண்டர்கள் அந்த இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலை மீது இருந்த காவித் துண்டை அகற்றி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
காவித்துண்டு சர்ச்சைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல் மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. மேலும், இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமீபகாலத்தில் இதுபோன்ற, சமூகத்திற்கு தொண்டாற்றிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று கூறியிருந்தார். துணை முதல்வரும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் காவி துண்டுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் அர்ஜூன் சம்பத். எம்ஜிஆர் நிறமே காவிதான். எம்ஜிஆருக்கு கோவில் கட்டி காவி வேஷ்டி காவித்துண்டு அணிவித்து வழிபடுகின்றனர். எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவை சேர்ந்த பெண் தான் காவி துண்டு போர்த்தி உள்ளார், எம்.ஜி.ஆர் காவி வேஷ்டி தான் அணிவார், எம்.ஜி.ஆர் காவிக்கு சொந்தக்காரர் என்று கூறினார். அயோத்தி விவகாரத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா. அப்படி இருக்கும் போது எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு போட்டதை சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். இதற்கு முதல்வர் துணைமுதல்வரை கண்டனம் தெரிவிக்க வைத்துள்ளதோடு பாஜக அதிமுக இடையே விரிசலை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி தூண்டு அணிவித்த விவகாரத்தில் முதல்வர் - துணை முதல்வர் ஜாக்கிரதையையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் அர்ஜூன் சம்பத்.
ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு... சமூக நீதி போராட்டத்துக்கான வெற்றி... திமுக எம்.பி. வில்சன்!!
இதே அர்ஜூன் சம்பத் ஏற்கனவே தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து ருத்ராட்ச மாலை போட்டு திருநீறு கும்குமம் வைத்து சூடம் ஏற்றி வழிபட்டார். இது கொந்தளிப்பை ஏற்படுத்தவே காவல்துறையினர் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். இப்போது எம்ஜிஆர் மீது காவித்துண்டு போடப்பட்ட சர்ச்சை குறித்து கருத்து கூறியுள்ளார்.