பள்ளிகள் மூடப்பட்டால் என்ன.. மாணவர்களுக்கு 5 முட்டைகள், உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 முட்டையுடன் சத்துணவுக்காக உலர் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எத்தனையோ ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கொடுக்கும் மதிய உணவுக்காக பள்ளிக்கு வந்து பாடம் படித்து சென்றனர். கடந்த 2 ஆண்டு காலமாகவே கொரோனா பரவல் பல மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைக்காமல் செய்து விட்டது.
கொரோனா பரவி வரும் சூழல் என்பதால், மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் பொருள்களான அரிசி, பருப்பு போன்றவை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பள்ளிகளில் மாணவர்கள் வர முடியாதபட்சத்தில் பெற்றோரும் அந்த உலர் பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் உலர் பொருள்களுடன் முட்டையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அனைவருக்கும் முட்டைகள் தனியாக கணக்கிட்டு வழங்கப்பட்டு வந்தன.
கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கத் தொடங்கியதால் சத்துணவு விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வருவதால் முதலில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கல்லூரிகளுக்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளிகள் விடுமுறை விடப்பட்டாலும் வீட்டில் உள்ள மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்க வழி செய்யும் வகையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 5 முட்டைகளையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான வேலை நாட்களை கணக்கிட்டு பொருட்களை விநியோகிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ அடையாள அட்டையை காண்பித்து பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.