போராட்டத்தை தள்ளி போட முடியாது... அரசு உத்தரவாதம் அளிக்காததால் அது தொடரும் - ஆசிரியர்கள்
Recommended Video
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களிடம் தமிழக அரசு எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்காததால் அப்போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 2009-ம் ஆண்டு மே 31-ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர்.
இன்று 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது. அரையாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களின் வினாத்தாள்களை ஆசிரியர்கள் திருத்துவார்கள். தற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே போராட்டத்தை ஜனவரி 7-ஆம் தேதி வரை தள்ளி போடுமாறு தமிழக அரசு கோரியிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவுடன் இன்று 2-ஆவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் அரசு எந்த உத்தரவாதமும் தரவில்லை. உத்தரவாதம் தந்தால் போராட்டத்தைத் தள்ளி வைப்பதாக கூறியிருந்தோம்.
ஆனால் உத்தரவாதம் கிடைக்காததால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.