தமிழ்நாட்டில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கு.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சற்று கூடுதலாகப் பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பல நீர் பிடிப்பு பகுதிகள் நிரம்பியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இதனிடையே மாநிலத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2015 சென்னை வெள்ளம் நினைவிருக்கா? பசிபிக் கடலில் உருவாகும் புதிய 'எல் நினோ'.. ஏன் முக்கியம்?
இன்று மழை
இது தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (24.01.2023) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்கள்
நாளை (ஜன.25) மற்றும் நாளை மறுநாள் (ஜன.26) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் ஜன 27, ஜன 28 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னை
அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் காக்காச்சி (திருநெல்வேலி) 50 மிமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வரும் ஜன. 26ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜன. 27, ஜன.28 தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.