குறிப்பிட்ட நேரம் மட்டுமே பால் விற்பனை.. பால் முகவர்கள் முடிவு.. அச்சப்பட வேண்டாமென ஆவின் அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆவின் பால் தங்குதடையின்றி நாள் முழுவதும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 664 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 23 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நடவடிக்கை பாயும்
இந்நிலையில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதால் அதை தடுக்க தமிழகம் முழுவதும் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வைப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி சர்வ சாதாரணமாக உலா வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பைக்கில் தேவையின்றி சுற்றுவோர் மீது இன்று முதல் நடவடிக்கை பாய உள்ளது.
சில்லறை கடைகளுக்கு நோ
இது ஒருபுறம் எனில் தமிழகம் முழுவதும் பால்விற்பனை நேரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பால்முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என எங்களது சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக நடவடிக்கை
பால் தட்டுப்பாடு எனக் கூறி வணிகர்கள் எனும் போர்வையில் ஒரு சில சமூக விரோதிகள் 1லிட்டர் பாலினை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்த தகவலை எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆவின் அறிவிப்பு
இந்நிலையில் பால் முகவர்கள் சங்கம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட நிலையில் ஆவின் நிறுவனம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நாள் முழுவதும் ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்கும். காலை முதல் இரவு வரை ஆவின் பால் தங்குதடையின்றி கிடைக்கும். மக்கள் ஆவின் கடைகளில் கூட்டமாக குவிய வேண்டாம். பால் கிடைக்காது என்று அச்சப்பட வேண்டாம் என அறிவித்துள்ளது.
கடும் கட்டுப்பாடு
கொரோனா வைரஸ் தொற்றை பரவுவதை தடுக்க காய்கறி சந்தைகளில் காய்கறி விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. உழவர் சந்தைகள் செயல்படும் நேரமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் காய்கறி சந்தைகளில் மொத்தமாக கூடுவதை தடுக்கவும் அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சில்லறை காய்கறி கடை உரிமையாளர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.