புரியலன்ற சோமாரிகளுக்கு... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... கமல்ஹாசன் காட்டம்
சென்னை: 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்குமுன் ஆள வந்தாராலோ, இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம் என இந்து என்ற சொல்லுக்கு கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் நடந்த கமல்ஹாசன் கூட்டத்தில் நேற்று முன்தினம் காலணி வீசப்பட்டது. நேற்றிரவு அரவக்குறிச்சி தொகுதியில் கல் மற்றும் முட்டை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு இன்று இறுதி நாள் என்ற நிலையில், சூலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து, நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி என்று பதிவிட்டு சமூக வலைதளங்களில், வீடியோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தநிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2019
மேலும், சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய, மாநில அரசுகள்.
ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.
நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை.
நாம் "இந்தியர்" என்கிற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.
நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.
"கோடி" ன்ன உடனே பணம் ஞாபம் வந்தால், நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல, வெறும் வியாதி! தமிழா நீ தலைவனாக வேண்டும் இதுவே என் வேண்டுகோள் என்றும் பதிவிட்டுள்ளார்.