மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. அக்காவுக்கு சுத்திப் போடுங்க.. அடுத்த ஜம்ப்?.. வச்சு செஞ்சாச்சு தோழரே!
சென்னை: சரி இப்ப ப.சிதம்பரம் வெளியில் வருவாரா மாட்டாரா.. யாருக்குத் தெரியும்.. என்னண்ணே உங்களுக்குத் தெரியாதா.. யாருக்குமே தெரியாதுடா அப்பிரண்டிஸ் பிரதர்களா.
சரி அதை விடுங்க.. மக்கள் நீதி மய்யம் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிச்சிடுமா.. இப்பத்தான் செங்கலை எடுத்து வச்சிருக்காங்க.. அடுத்துதான் வீடு கட்டணும்.. அப்பறம்.. முதல்ல கட்டட்டும்ப்பா அதுக்குப் பிறகு பார்ப்போம்.
சரிண்ணா இந்த.. ஏய் இரு.. என்ன சம்பந்தா சம்பந்தம் இல்லாத கேள்வியா இருக்கே இன்னிக்கு என்னாச்சுடா உங்களுக்கு.. அரசியல்னாலே வாயெல்லாம் இப்படித்தானே ஸ்லிப் ஆகுது இப்பெல்லாம்!
பின்னாடி முன்னாடி கண்ணாடி
தகுதியானவனை பின்னால் வைத்து, தகுதியற்றவனை முன்னால் வைப்பவனாக ஒரு அரசன் இருந்தால், அதுவே அவனை அழிக்க போதுமானது! என்றார் வள்ளுவர். தகுதியுள்ளவர்களை பயன்படுத்த தவறினால், கட்சிக்குதான் இழப்பு: பழ.கருப்பையா. (சரிங்க அய்யா, காங்கிரஸ் டூ அ.தி.மு.க. அங்கேயிருந்து தி.மு.க. இப்ப மறுபடி இங்கேயிருந்து எங்கேன்னு சொல்லிட்டீங்கன்னா வரலாறுல பதிவு பண்ண வசதியா இருக்குமுங்க.)
வச்சும் செஞ்சாச்சு
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. எனினும் சட்டம் எப்போதும் தன் கடமையை செய்யும். இந்த விவகாரத்தில் நீதித்துறை நடவடிக்கைகள் எப்படி போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: டி.ராஜா. (இதுக்கு பேருதான் நோகாம நோன்பு கும்பிடுறதுங்கிறது. கூட்டணியில இருக்கிற பாவத்துக்காக ப.சிதம்பரத்துக்காக லேசா குரல் கொடுத்தா மாதிரியும் ஆச்சு, காங்கிரஸை வழக்கம்போல வெச்சு செஞ்ச மாதிரியும் ஆச்சு.)
புதுசுல்ல.. அதான்
புதிய பாடத்திட்டம் என்பதால் ‘டெட்' தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையவில்லை. அதேபோல் தமிழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்கிற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செங்கோட்டையன். (புதிய பாடத்திட்டத்துல ஆசிரியர்களே ஃபெயிலாகுறப்ப, பசங்க பாடு என்னாகும் தலைவரே? )
நமக்கு நாக்குத் தள்ளுதே
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நதி நீர் ஆணையம், ஒரே கல்விக் கொள்கை, ஒரே மொழி எனக்கூறி, கடைசியில் ஒரே நாடு, ஒரே கட்சி எனும் நிலையை நோக்கி பா.ஜ.க. செல்கிறது: இரா.முத்தரசன். (இதுல உங்களுக்கு என்னண்ணே பொறாமை? அது உருப்படற கட்சி, உருப்படுது. ஆனா நம்ம நிலைமையோ? அவங்க தேசத்தை ஆளுறதுக்கே அறுதிப் பெரும்பான்மையில வந்து உட்காருறாங்க. ஆனா நாமளோ ரெண்டு சீட்டு வின் பண்றதுக்கே ஸ்டாலினை தாங்க வேண்டியிருக்குது.)
சுத்திப் போடுங்கப்பா
ஒரு டாக்டரின் பிள்ளை டாக்டராகும்போதோ, ஒரு வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞராகும்போதோ யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி வாரிசு அரசியல் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன: தமிழச்சி தங்கபாண்டியன். (டாக்டரும், வக்கீலும் தங்களோட வாரிசுகளை சம்பந்தப்பட்ட துறையில் படிக்க வைக்காமலே, அப்படியே யுனிவர்சிட்டி டிகிரியை வீட்டுல பிரிண்ட் பண்ணியா கொடுக்கிறாங்க!? டாக்டர் மகன், எம்.பி.பி.எஸ். படிச்சு பாஸ் பண்ணாதானே டாக்டராக முடியும்? இவ்ளோ கலக்கலா பேசுற உங்களுக்கு உங்க கட்சியில சொல்லி சுத்திப் போட சொல்லுங்கக்கா)
- ஜி.தாமிரா