மைன்ட் வாய்ஸ் மன்னாரு.. தேவை ஒரு டைரக்டர் அம்புடுதேன்... 234 பேரு வேணுமேண்ணே!
சென்னை: டேய் வேலூர் பக்கம் போய்ராதீங்கடா.. வெளுத்தெடுக்குதாம் மழை.. அப்ப மெட்ராஸ் பக்கமே சுத்திட்டிருப்போமாண்ணே.. அதுதாண்டா சரி.. இங்கேயே இருங்க.
ஏண்ணே இந்த மழை திடீர் திடீர்னு பெய்யுது.. விளங்காத பயலுகளா.. நீங்கதாண்டா அம்புட்டுக்கும் காரணம்.. செய்கை பூராம் செஞ்சுட்டு மழையை திட்டுறது.. அப்பரண்டிஸ்களா.
சரிண்ணே விடுங்க.. இன்னிக்கு ஏதாச்சம் மேட்டர் இருக்கா.. மேட்டர்லொம் இல்லை.. மேடவாக்கம் வரைக்கும் ஒரு வேலை இருக்கு போய்ட்டு வந்துர்றேன். . அதுவரைக்கும் இதைப் படிச்சுட்டு இருங்க..!
கேள்விக்கு என்ன பதில்
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தன் பேச்சில் என்னமோ விவசாயிகள் இந்த நாட்டில் மகிழ்ச்சி கடலில் திளைப்பதாக பேசியுள்ளார். விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும், நலிந்தோருக்கும் விரோதமான அரசு இது: இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா. (ஓ.கே. சரி அது இருக்கட்டும். இந்த தா.பா., தா.பா.ன்னு உங்க கட்சியில ஒரு வஸ்தாது இருந்தார், ஆக்சுவலா இப்ப கொஞ்சம் உடல்நிலை டல்லா இருக்கார். அவரு உங்களைப் பத்தி ச்சும்மா சீவு சீவுன்னு சீவியிருக்கார் அதுக்கு என்ன பதில் சொல்றீங்க சார்?)
நல்லதொரு டைரக்டர் தேவை
கட்சி துவக்கிய பதினான்கு மாதத்திலேயே லோக்சபா தேர்தலை தைரியமாக சந்தித்து, மக்களின் பெரும் ஆதரவை பெற்றோம். எனவே 2021 பொது தேர்தலில் மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைக்கப் பாடுபடுவது என முடிவு செய்துள்ளேன்: கமல்ஹாசன். (உத்வேகத்தோடு நீங்க பாடுபடுற மாதிரி தெரியலையேண்ணே. தனியா அரசியல் கன்சல்டன்ஸி டீம்ட்ட அக்ரீமெண்ட் போட்டிருக்கீங்க. அவுங்க சொல்ற படிதானே ஆடுறீங்க! ஆக, சினிமாவோ, அரசியலோ உங்களை இயக்க ஒரு ஆள் வேண்டும் அவ்வளவுதான்.)
இரண்டு கண்கள்
தெய்வீகத்தையும், தேசியத்தையும் காப்பவர்களாகவே பிரதமர் மோடியும், முதல்வர் இ.பி.எஸ்.ஸும் உள்ளனர். எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் தமிழகத்தில் இரண்டு கட்சிகள்தான் இருக்கும். அதில் அ.தி.மு.க. ஆளும், தி.மு.க. வாழும்! அவ்வளவே: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. (அண்ணே அடி தூளு அரசியல் பேச்சுண்ணே இது. அதெல்லாம் சரி, ஆனா உங்க கட்சி என்னமோ ஆண்டு, சம்பாதிச்சு, தி.மு.க.வுக்கு அள்ளித் தந்து வாழ வைக்கிற மாதிரியே இந்த பேச்சு எடுத்துக்கப்படுதே! அது உண்மையாண்ணே?)
பேராசை
கந்துவட்டிக் காரர்களும், கட்டப்பஞ்சாயத்து நபர்களும்தான் நம் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் வரும். அப்போது அ.ம.மு.க. வென்று, ஆட்சியை பிடிக்கும்: தினகரன். (அண்ணே 234 தொகுதிகளில் நிக்குறதுக்கு ஆள் வேணும், அவங்களை மக்களுக்கு பிடிக்கணும், ஜெயிக்கணும்....ஆனாலும் உங்க கனவு பெருங்கனவையும் தாண்டின கடும் கனவா இருக்குதேண்ணே)
- ஜி.தாமிரா