எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை.. அதிர வைத்த அதிமுக கூட்டணிகள்.. ஒரு குட்டி தொடர்! #aiadmk
எம்ஜிஆருக்கு பிறகு பல கட்சிகளுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்து வெற்றி பெற்றார்.
சென்னை: அன்று எம்ஜிஆர் உருவாக்கின கட்சியை பிறகு எப்படியெல்லாம் ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றினார், எந்தெந்த கட்சிகளுடன் எப்படி எல்லாம் கூட்டணி வைத்தார், அதற்கான எடுத்த முயற்சிகள், படிப்பினைகள், பாராட்டுகள் என அனைத்தையும் விளக்குகிறது இந்த தொடர்:
1972ல் திமுகவுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார் எம்ஜிஆர். பிறக்கிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தனித்து விடப்பட்ட நிலையிலும் அஞ்சாமல் மக்களை தஞ்சமடைகிறார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கிறார் ஆர்.எம்.வீரப்பன்.
எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர்கள் ஒருங்கிணைகிறார்கள். புதுமுகமாக 1973ம் ஆண்டு திண்டுக்கல் இடைத் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. திமுகவை வீழ்த்தி முதல் வெற்றிக் கனியை அமோகமாக பறித்து தமிழக அரசியல் அரங்கை அதிர வைக்கிறார் எம்ஜிஆர். அடுத்து 1974ல் கோவை இடைத் தேர்தலிலும் அதிமுக வெல்கிறது.
வெற்றிக்கு வழி
அரசியல் அரங்கில் சாதுரியமே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை நன்றாக புரிந்து கொண்ட எம்ஜிஆர் காங்கிரஸுடன் கரம் கோர்க்கிறார். மிசா சட்டத்தின்போது இந்திரா காந்திக்கு ஆதரவாக இருக்கிறார். இந்த உறவு வலுப்பட்டு கடைசி வரை அசைக்க முடியாத நட்பாக மாறுகிறது.
எம்ஜிஆர் வெற்றி
1976ல் திமுக ஆட்சியை காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்கிறது. 1977ல் சட்டசபைத் தேர்தல் வருகிறது. எம்ஜிஆரின் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறது. அதன் பிறகு 1987ம் ஆண்டு வரை எம்ஜிஆரின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்கிறது. 3 சட்டசபைத் தேர்தல்களில் எம்ஜிஆர் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக திகழந்தார்.
எம்ஜிஆர் பார்முலா
இந்த காலகட்டத்தில்தான் காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் இடையே ஆழமான நட்பும், கூட்டணியும் இருந்தது. லோக்சபா உனக்கு, சட்டசபை எனக்கு என்று புதிய பார்முலாவை உருவாக்கி அரசியலை அதிர வைத்தார் எம்ஜிஆர். இதுதான் எம்ஜிஆர் பார்முலா எனக்கு பிரபலமானது.
சரண்சிங்
இடையில் ஜனதாக் கட்சியுடன் கை கோர்த்தார் எம்ஜிஆர். இது எம்ஜிஆரின் அடுத்த கூட்டணி. தனது அமைச்சரவையில் அதிமுகவுக்கு 2 இடத்தையும் கொடுத்தார் பிரதமராக இருந்த சரண் சிங். இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2 ஆண்டுகளில் கவிழ்ந்தது.
திமுக ஷாக்
1980ல் அதிமுக காங்கிரஸ் கூட்டணி கலகலத்தது. திமுகவுடன் கை கோர்த்தது காங்கிரஸ். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 37 இடங்களில் வென்றது. அதிமுகவுக்கு 2 இடமே கிடைத்தது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த இந்திரா காந்தி, எம்ஜிஆர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார். சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அதிரடியாக அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிர்ந்து போனது. 234 தொகுதிகளில் 129 இடங்களை அதிமுக கைப்பற்றி காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் ஷாக் கொடுத்தது.
இறுதிக்காலம்
எம்ஜிஆர் என்ற சக்தியை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த காங்கிரஸ் மீண்டும் அவரிடமே வந்தது. இந்தக் கூட்டணி பின்னர் எம்ஜிஆரின் இறுதிக்காலம் வரை நீடித்தது. எம்ஜிஆரைப் பொறுத்தவரை சட்டசபைக்கு மாநிலக் கட்சிகள், லோக்சபாவுக்கு தேசியக் கட்சிகள் என்ற நிலைப்பாட்டில் கடைசி வரை தெளிவாக இருந்தார்.
காங்கிரஸ் எம்பிக்கள்
இதனால்தான் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு குறைந்த இடங்களைக் கொடுப்பார். அதேசமயம் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு அள்ளிக் கொடுப்பார். ஒன்றுமே செய்யாமல் லட்டு லட்டாக காங்கிரஸ் தமிழகத்தில் எம்பிக்களைப் பெற்று ஜெயித்த காலம் அது. இன்று போல காங்கிரஸை கெஞ்ச விடாமல் எம்ஜிஆரே அள்ளிக் கொடுத்தார்.
எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை.. தன் ஸ்டைலில் தனி முத்திரை பதித்த ஜெ. கூட்டணிகள்