அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் பாஸா? இல்லையா? அமைச்சர் அன்பழகன் அளித்த விளக்கம்
சென்னை: மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை என்று கூறிய உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் முதல்வர் அறிக்கையையும் ஒருங்கிணைத்து உயர்கல்வித்துறை செயல்பட்டு வருவதாக கூறினார்.
பொறியியல் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மறுப்பு தெரிவித்து இமெயில் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்மையில் கூறினார்
ஆனால் ஏ.ஐ.சி.டி.இ. எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் , "தேர்வு எழுதாமல் மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்" என்று ஏஐசிடிஇ சேர்மன் அண்மையில் கேள்வி எழுப்பி இருந்தார்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு- நடிகர் சூர்யா வரவேற்பு
அரியர் மாணவர்கள்
இதனால் அரியர் ஆல் பாஸ் மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு வைக்கப்படுமோ என்று கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ பொன்முடி சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பதில்
அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதில் அளிக்கையில், இறுதிப்பருவத் தேர்வுகளை தவிர பிற பருவத் தேர்வுக்காக கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நோக்கம் இல்லை
எது நடக்குமோ அதை மட்டுமே அதிமுக அரசு கூறும். இதில் எந்த உள்நோக்கமும் பாகுபாடும் இல்லாமல் மாணவர்கள் உயிர் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அறிவித்த அறிவிப்பு தான் அரியர் பாஸ். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் முதல்வர் அறிக்கையையும் ஒருங்கிணைத்து உயர்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
அச்சப்பட வேண்டாம்
மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை. ஏஐடியூசி சேர்மன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு சொந்த மின்னஞ்சலில் இருந்து மெயில் அனுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் E mail யில் இருந்து அனுப்பவில்லை. அதேபோல் அரசுக்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எனவே இது குறித்து மாணவர்கள் அச்சப்பட வேண்டாம். இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஏஐடியூசி, யுஜிசி வழிகாட்டுதல்படி அந்த தேர்வுகள் நடத்தப்படும்" இவ்வாறு கூறினார்.