இல்லம் தேடி கல்வி RSSஅஜெண்டாவா? எச்சரிக்கையாக இருக்க வேண்டியஇடம் இதுதான்: அன்பில் மகேஷ் பரபர பேட்டி
சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து எச்சரிக்கை என்பது எங்கே இருக்க வேண்டும் என்றால், தன்னார்வலர்களை நாங்கள் செலக்ட் செய்யும் போது தான் எச்சரிக்கை இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் இப்படியொரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பட்டப்படிப்பு நிறைவு செய்த தன்னார்வலர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
RSS அஜென்டாவுடன் இல்லம் தேடி கல்வி திட்டம்? அமைச்சரை அவசரமாக அழைத்த ஸ்டாலின்! அடுத்து என்ன?
வழிகாட்டு முறை
"இல்லம் தேடி கல்வி" பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்கள், தினமும் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என புதுமையான முறையில் பாடங்களை சொல்லிக் கொடுக்க உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
யாருக்கு கல்வி
பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் இந்த வகுப்புகள் செயல்பட உள்ளன. மேலும், பிளஸ் 2 வரையில் படித்த மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்க உள்ளனர். இதன்படி, மொத்தமாக 17 லட்சம் தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்துக்காக தேவைப்படுகிறார்கள். தொடர்ந்து ஆறு மாதத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆர்எஸ்எஸ் திட்டம்
தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்பாகவும் சமூகநீதியை அறவே ஒழிக்கும் வகையில் அதுபற்றிய முக்கியத்துவத்தையே தராமலும், ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி உருவாக்கப்பட்ட மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்று கொள்கை முடிவாக முன்பே தி.மு.க அரசு அறிவித்துள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டம்
இந்தநிலையில், நமது பள்ளிக் கல்வித் துறை அதனை தெரிந்தோ, தெரியாமலோ 'பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது என்பது மனுதர்ம சனாதனக் கல்வியை ஒட்டகம் நுழைவதுபோல் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்று உறுதியாக உள்ள பலருக்கும் இப்போதுள்ள போக்கு மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது, அதிர்ச்சியாகவும் உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவுதான்," என்று வீரமணி விமர்சித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பும் இந்ததிட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. . மேலும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு வடிவம் தான் இந்த இல்லம் தேடி கல்வித்திட்டம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும் கூட தாங்கள் கற்றுக் கொடுக்காத எதை இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் கற்றுக் கொடுக்கப்போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
என்ன விளக்கம்
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இத்திட்டம் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், "இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆரம்பித்து வைத்தார். இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது. எல்லோருடைய கருத்தையும் மனதில் வைத்து, நவம்பர் முதல் இரண்டு வாரம் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை நாங்களும் உற்று கவனிக்க போகிறோம்.
தன்னார்வலர்கள்
நீங்கள் சொல்வது போல், இந்த அமைப்பு வந்திருமோ, அந்த அமைப்பு வந்திருமோ, இந்த சிந்தனைகள் உள்ளே வந்திடுமோ என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அவர்கள் எதிர்க்கவில்லை, எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறார்கள். எச்சரிக்கை என்பது எங்கே இருக்க வேண்டும் என்றால், தன்னார்வலர்களை நாங்கள் செலக்ட் செய்யும் போது தான் எச்சரிக்கை இருக்க வேண்டும்.
முக்கியத்துவம்
அவர்களுடைய பின்புலம் என்ன, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அங்குள்ள உள்ளூர் மக்கள் மூலமாகவும், நாங்களும் அவர்கள் யார் என்பதை விசாரித்துதான் எடுப்போம். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 68 ஆயிரம் பெண்கள் பதிவு செய்துள்ளார்கள். 10 ஆயிரம் என்கிற அளவில் தான் ஆண்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்த திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதன்பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்போம். அதிகம் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால் தன்னார்வலர்களை எச்சரிக்கை உணர்வுடன் தான் தேர்வு செய்வோம்.
கவனமாக உள்ளோம்
இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசினுடைய நிதியில் இருந்து செய்யப்படுகிறது. அவர்கள் (கூட்டணியினர்) கொடுத்த எச்சரிக்கையினை மனதில் வைத்து கண்ணும் கருத்துமாக தன்னார்வலர்களை தேர்வு செய்து வருகிறோம். 12 மாவட்டங்களில் திட்டங்களை செயல்படுத்தி அதில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ்களை தெரிந்து கொண்டு மற்ற மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்துவோம்" இவ்வாறு அன்பில் மகேஷ் கூறினார்.